» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: ஆட்சியர் தகவல்
வியாழன் 1, ஜூன் 2023 5:02:53 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் "தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய மற்றும் மாநில பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் 32 நபர்களும், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 முதல்நிலை தேர்வில் 30 நபர்களும் வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளனர்.
தற்போது தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக எதிர்வரும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மற்றும் TNUSRB-SI தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த இலவச பயிற்சி வகுப்பில் முன்னணி பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. வாரம் ஒரு முறை மாதிரி தேர்வுகள் நடைபெறுகிறது. போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் இவ்வலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
எனவே தென்காசி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையுமாறும், மேலும் விபரங்களுக்கு 04633-213179 மற்றும் 6381552624 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.