» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலம்!
வெள்ளி 2, ஜூன் 2023 3:12:07 PM (IST)
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. திருவிழாவையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு உதயமார்த்தாண்ட பூஜை நடந்தது.
மதியம் உச்சிகால பூஜை நடந்தது. பக்தர்கள் சுவாமியை அருகில் நின்று தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் நெரிசல் இன்றி நீண்ட வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி கடல் மண்ணை பெட்டியில் சுமந்து வந்து அதை கடற்கரையில் கொட்டி நேச்சை கடன் செலுத்தினர். அது கடற்கரையில் குன்றுபோல் காட்சியளித்தது ஏராளமானவர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
இன்று இரவு விழாவின் சிகர நிகழ்ச்சியான சுப்பிரமணியசுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகரமீனுக்கு காட்சியளிக்கிறார். நாகர்கோவில், திசையன்விளையில் இருந்து உவரிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட எஸபி சிலம்பரசன் நேரில் ஆய்வு செய்தார். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதா கிருஷ்ணன் செய்துள்ளார்.