» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கனவில் கூட நினைக்கவில்லை!!- ரயில் விபத்தில் தப்பிய தென்காசி பயணி!
சனி 3, ஜூன் 2023 12:19:10 PM (IST)
ஒடிசா ரயில் பயணிகளின் அலறல் சத்தம் நெஞ்சை உறைய செய்தது என விபத்தில் இருந்து தப்பிய தென்காசி பயணி தெரிவித்துள்ளார்.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கோரமண்டல் ரெயில் விபத்தில் இதுவரை 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த ரெயிலில் பயணித்து உயிர் தப்பியவர்களில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தப்பளகுண்டு தெருவை சேர்ந்த ரமேஷ்(45) என்பவரும் ஒருவர் ஆவார்.
விபத்து குறித்து அவர் கூறியதாவது: நான் ஜார்கண்ட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். அங்கு சபை ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். நாங்கள் விபத்துக்குள்ளான ரெயிலில் 2-ம் அடுக்கு குளிர்சாதன பெட்டியில் பயணித்தோம். நேற்றிரவு 7 மணியளவில் திடீரென நாங்கள் அமர்ந்திருந்த பெட்டி குலுங்கியது. இதனால் இருக்கைகளில் அமர்ந்திருந்த நாங்கள் அனைவரும் பெட்டிக்குள் கீழே விழுந்தோம். உடனே ரெயில் தடம் புரண்டதை நாங்கள் அறிந்து கொண்டோம்.
இதனால் ரெயில் பெட்டியில் தீப்பற்றி விடக்கூடாது என்பதற்காக அதில் இருந்து உடனடியாக அலறியடித்துக் கொண்டு அனைவரும் வெளியேறினார்கள். அப்போது நாங்கள் அமர்ந்திருந்த பெட்டிக்கு முந்தைய பெட்டிக்கு முன்பாக இருந்த அனைத்து பெட்டிகளும் விபத்தில் சிக்கியிருந்தது. சுமார் 9 பெட்டிகள் வரை இந்த விபத்தில் அப்பளம் போல் நொறுங்கி கிடந்தது.
இதில் சில பெட்டிகள் அருகில் 3-வது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த மற்றொரு ரெயில் மீது மோதியது. அதில் இருந்த பயணிகளின் அலறல் சத்தம் நெஞ்சை உறைய செய்தது. பின்னர் அங்கு நிற்கவே மிகவும் பயமாகவும், படபடப்பாகவும் இருந்தது. இதனால் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு புவனேஸ்வருக்கு கிளம்பி வந்து விட்டோம். இப்படியொரு சம்பவம் நடந்துவிடும் என்று கனவில் கூட நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.