» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கீரை வியாபாரி மரணத்தை மூடி மறைக்கும் அதிகாரிகள்: சமூக ஆர்வலர் கண்டனம்!
சனி 3, ஜூன் 2023 8:34:37 PM (IST)
தூத்துக்குடியில் மாநகராட்சியின் அலட்சியத்தால் உயிரிழந்த கீரை வியாபாரியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் மாநகர்,மாவட்ட செயலாளர் அ.செல்வகுமார் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் கீரை வியாபாரம் செய்த கீரை வியாபாரி அதிகாலையில் காய்கறி மார்க்கெட் சிக்னல் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு வியாபாரத்திற்கான கீரைகளை எடுத்து வைத்துவிட்டு அண்ணா சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலியில் அவர் கைபட மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மாநகராட்சி நிர்வாகத்தால் அந்த சிலைக்காக அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அந்த இரும்பு வேலி முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. ஆனால் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் அந்த உயிரிழப்பு வெளியே தெரியாதவாறு மூடி மறைத்துள்ளனர். கள்ளச்சாராயத்தை குடித்து உயிர் இழந்தவர்களகளுக்கு 10 லட்சம் வழங்கிய தமிழக அரசு தன் குடும்ப வாழ்வாதாரத்தைக் காக்க சாலையோரத்தில் வியாபாரம் செய்த ஏழை கீரை வியாபாரி ஜெய்கணேஷ் குடும்பத்தை காத்திட என்ன செய்ய போகின்றது?
மாநகராட்சியின் அலட்சியப் போக்கால் தனது கணவரை இழந்த மனைவி, தந்தையை இழந்த அப்பாவி குழந்தைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் என்ன செய்யபோகின்றது? வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அக்குடும்பத்தை காத்திட மாவட்ட நிர்வாகமும்,மாநகராட்சி நிர்வாகமும் என்ன செய்யபோகின்றது?
அலட்சியமாக செயல்பட்டு அப்பாவி கீரை வியாபாரியின் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது? மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக அப்பாவி கீரை வியாபாரி ஜெய்கணேஷ் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீட்டுத்தொகையும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் பெற்றுத்தர ஆவண செய்ய வேண்டும் என்று தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் (NPRF) சார்பாக கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.