» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:44:21 PM (IST)



பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், குலவணிகர்கிராமம், பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணித்துறை அரசுச் செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் இரா.செல்வராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் எஸ்.மணிவண்ணன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலையில் இன்று (18.02.2025) பார்வையிட்டு ஆய்வு செய்து, துறைசார்ந்த அலுவலர்களுடன் முன்னேற்ற பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து தமிழர்களுடைய அடையாளங்கள் உலகத்திற்கே தெரிய வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு முன்னெடுப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில், கீழடியில் தமிழர்களுடைய வரலாற்று அடையாளங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பொருநை அருங்காட்சியகம் கட்ட வேண்டுமென்று சட்டமன்ற பேரவையில் 09.09.2021 அன்று அறிவித்தார்கள். 

தொடர்ந்து, தமிழகத்தின் தொன்மையான வரலாற்றினை உலகரிய செய்யும் பொருட்டு கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்திட திருநெல்வேலி மாவட்டம் குலவணிகர்புரம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 18.05.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பில் ரூ.56.36 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏறத்தாழ 13 ஏக்கர் நிலத்தில் 54 ஆயிரம் சதுர அடியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.


ஆதிச்சநல்லூர் தொகுதி A மற்றும் B கட்டடம் 16,486 சதுர அடியில் தரைதளம் மற்றும் முதல் தளமும், சிவகளை கட்டடம் 8,991 சதுர அடியில் தரைதளம், முதல் தளமும், கொற்கை தொகுதி A மற்றும் B கட்டடம் 17,429 சதுர அடி தரைதளம், முதல் தளமும் எனவும், மேலும், அறிமுக காட்சி கட்டடம், கைவினை பொருட்கள் பணிமனை, ஒப்பனை அறைகள் கட்டங்களும் கட்டப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு கட்டடத்திற்கு இணைப்பு சாலை அமைக்கவும், அழகுநிறைந்த குளமும், குளத்தின் மீது பாலம் அமைக்கவும், சுற்றுச்சுவர், பூங்காக்கள், வண்ண விளக்குகள், நீறுற்று, சுற்றுச்சூழல் திறந்தவெளி திரையரங்கு அமைப்புகள் போன்ற பல்வேறு பணிகள் மக்களை கவரும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை 75 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. அனைத்து பணிகளும் 30.04.2025-க்குள் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. துறைசார்ந்த அலுவலர்கள் ஒத்துழைப்புடன் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

ஆய்வின்போது, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் என்.ஒ.சுகபுத்ரா, துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் சட்டமன்ற பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் எஸ்.மணிகண்டன், மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் ப.செல்வராஜ், தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம், கட்டடக்கலை வல்லுநர் ஷோபனா, கண்காணிப்பு பொறியாளர்கள் எஸ்.ராஜ்குமார், மகாவிஷ்ணு, செயற்பொறியாளர்கள் ஆர்.நாராயணமூர்த்தி, பிரபு, கு.ஸ்ரீராமன், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory