» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவை மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள்: பூங்காக்கள், மால்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை
செவ்வாய் 3, ஆகஸ்ட் 2021 12:52:39 PM (IST)
கோவை மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தொற்று பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை தொடர்ந்து ஆட்சியர் சமீரன் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளில் சில மாற்றங்கள் செய்து அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-
மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரி மற்றும் டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது.
அனைத்து பூங்காக்களிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து மால்கள் மற்றும் பன்னடுக்கு வளாகங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் மால்களில் உள்ள உணவகங்களுக்கு ஏற்கனவே ஜூலை 31-ந் தேதி அன்று அறிவிக்கப்பட்ட நடைமுறைகள் பொருந்தும்.
மேலும் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை நாளை (4-ந் தேதி) முதல் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
கரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் முறையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முன்னதாக மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை 10 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டு மாலை 5 மணியுடன் கடைகள் மூடப்பட்டது. நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் வலியுறுத்தியதன் காரணமாக காலை 6 மணிக்கே கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.