» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 20.131 பேர் தேர்ச்சி பெறவில்லை
புதன் 4, ஆகஸ்ட் 2021 10:31:17 AM (IST)
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 20 ஆயிரத்து 131 பேர் தேர்ச்சி பெறவில்லை.
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா நோய்த்தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டது. இவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் முறையையும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வெளியிட்டது. அதன் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது.
அதன் தொடர்ச்சியாக நேற்று சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகி இருக்கிறது. இந்த மாணவர்களுக்கு பொறுத்தவரையில் 20 மதிப்பெண்கள் செய்முறைத்தேர்வு அடிப்படையிலும், மீதமுள்ள 80 மதிப்பெண்கள் எழுத்து தேர்வு அடிப்படையிலும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, யூனிட் தேர்வில் இருந்து 10 மதிப்பெண், அரையாண்டு தேர்வு மதிப்பெண்ணில் இருந்து 30 மதிப்பெண், வாரியத் தேர்வுக்கு முந்தைய தேர்வில் மாணவர் பெற்ற மதிப்பெண்ணில் இருந்து 40 மதிப்பெண் என இந்த 80 மதிப்பெண் கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதனை அடிப்படையாக கொண்டு மாணவ-மாணவிகளின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, அவர்களுடைய தேர்வு முடிவு நேற்று பிற்பகல் 12 மணியளவில் வெளியிடப்பட்டது. மாணவ-மாணவிகள் அவர்களுடைய தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று பார்த்து தெரிந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு 20 ஆயிரத்து 387 பள்ளிகளில் இருந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய நிலையில், இந்த ஆண்டு 21 ஆயிரத்து 467 பள்ளிகளில் இருந்து தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து இருந்தனர். அதன்படி, 21 லட்சத்து 50 ஆயிரத்து 608 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருந்தனர். இதில் தனித்தேர்வர்கள் 36 ஆயிரத்து 841 பேர் பதிவு செய்திருந்தார்கள். அவர்களுக்கு வருகிற 16-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை எழுத்துத்தேர்வு நடைபெற இருக்கிறது.
இவர்களை தவிர 21 லட்சத்து 13 ஆயிரத்து 767 பேர் பள்ளி அளவில் தேர்வு எழுத இருந்தனர். கொரோனா காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு, இவர்களுக்கு சி.பி.எஸ்.இ. வெளியிட்டு இருந்த கணக்கின்படி, தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் 20 லட்சத்து 97 ஆயிரத்து 128 மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவுகள் மட்டும் நேற்று வெளியிடப்பட்டு இருக்கிறது. இதர 16 ஆயிரத்து 639 பேரின் மதிப்பெண் கணக்கிடும் பணி நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
அந்தவகையில் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 20 லட்சத்து 97 ஆயிரத்து 128 மாணவ-மாணவிகளில்,20 லட்சத்து 76 ஆயிரத்து 997 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். மீதமுள்ள 20 ஆயிரத்து 131 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதத்தை பார்க்கையில், மாணவர்கள் 98.89 சதவீதம் பேரும், மாணவிகள் 99.24 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 0.35 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதேபோல், 2 லட்சத்து 962 பேர் 90 சதவீதம் முதல் 95 சதவீதம் வரையில் மதிப்பெண்ணும், 57 ஆயிரத்து 824 மாணவ-மாணவிகள் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.