» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு உறுதி: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
சனி 21, ஆகஸ்ட் 2021 3:34:02 PM (IST)
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், கரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து, வரும் செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்துள்ளார். அவர் பேசும்போது, வரும் செப்டம்பர் 1ம் தேதி 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது. வகுப்புகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருக்கிறோம். மேலும், மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி, வகுப்பில் மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு உட்காருவது, முகக்கவசம் அணிவது, 50 சதவீத மாணவர்கள் மட்டுமே சுழற்சி முறையில் பள்ளிக்கு வருவது, அவர்களுக்கு தேவையான கிருமி நாசினிகள் வழங்கப்படுவது, பள்ளிகள் தயார் நிலையில் இருப்பது, ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படுவது என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளன.