» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பைக் மீது மினி லாரி மோதல்: மின்வாரிய ஊழியர் உட்பட இருவர் பரிதாப சாவு
வெள்ளி 24, ஜூன் 2022 9:17:36 PM (IST)
கோவில்பட்டி அருகே பைக் மீது மினி லாரி மோதிய விபத்தில் மின் வாரிய ஊழியர் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாரங்குளம் இந்திராநகர் காலனியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (55), கயத்தாறு அருகே செட்டிகுறிச்சி துணை மின் நிலையத்தில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மீனம்பட்டியைச் சேர்ந்தவர் வைரமுத்து. இவரும், அண்ணா துரையும் நண்பர்கள். வைரமுத்துவின் மனைவி சுந்தரேஸ்வரி கோவில்பட்டிக்கு வந்தார். பின்னர் அவர் தனது ஊருக்கு திரும்பி செல்வதற்காக புறப்பட்டார்.
அப்போது கோவில்பட்டிக்கு வந்த அண்ணாதுரை தனது மோட்டார் சைக்கிளில் சுந்தரேஸ்வரியை பஸ் நிலையத்தில் பஸ் ஏற்றி விடுவதாக கூறி அழைத்து சென்றார். அவர்கள் கோவில்பட்டி- சாத்தூர் ரோட்டில் வேலாயுதபுரம் இலுப்பையூரணி சந்திப்பு பகுதியில் சென்றபோது, எதிரே சிவகாசியில் இருந்து தூத்துக்குடிக்கு அட்டைப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற மினி லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அண்ணாதுரை, சுந்தரேஸ்வரி ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த அண்ணாதுரை, சுந்தரேஸ்வரி ஆகியோரது உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மினி லாரி டிரைவரான விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா தாயில்பட்டியைச் சேர்ந்த மோகனை (52) கைது செய்தனர்.
விபத்தில் இறந்த அண்ணாதுரைக்கு அந்தோணியம்மாள் (52) என்ற மனைவியும், குகன் (32) என்ற மகனும், ரதி (29), தேன்மொழி (24) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இறந்த சுந்தரேஸ்வரிக்கு அக்ஷயா (18), ஹரிணி (17) ஆகிய 2 மகள்களும், அருண் (11) என்ற மகனும் உள்ளனர். கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.