» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராமேஸ்வரம் வருகை : அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை!
சனி 25, ஜூன் 2022 11:24:56 AM (IST)
ராமேஸ்வரம் வருகை தந்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் ராமேஸ்வரம் வருகை தந்துள்ளார். ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்த அவருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் வைக்கப்பட்ட கலசத்தில் இருந்து புனித நீரானது ஆளுநர் மீது தெளிக்கப்பட்டது. முன்னதாக கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தையும் குடும்பத்தோடு தரிசனம் செய்தார்.
தொடர்ந்து கார் மூலமாக புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதிக்கு சென்ற கவர்னர் இரண்டு கடல் சங்கமிக்கும் பகுதியான அரிச்சல் முனை பகுதியை பார்வையிட்டார். அங்கிருந்து கார் மூலமாக புறப்பட்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டுக்கு வருகை தந்து அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து பேசினார். பின்னர், அப்துல்கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி மணிமண்டபத்தில் உள்ள கலாமின் சிலைகளை பார்வையிட்டார். கவர்னர் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவில், பேருந்து நிலையம் மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.