» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தந்த மாயத்தேவர் காலமானார்!
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 5:41:28 PM (IST)
அதிமுகவுக்கு முதன் முதலில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தந்த சின்னாளபட்டி கே.மாயத்தேவர் உடல்நலக் குறைவால் காலமானார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.உச்சம்பட்டி கிராமத்தில் 1934-ம் ஆண்டு பிறந்தவர் கே.மாயத்தேவர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவர், எம்.ஜி.ஆர்., அதிமுக எனும் கட்சியை துவங்கியது முதல் அவருடன் இணைந்து பணியாற்றத் துவங்கினார். கட்சி துவங்கிய பிறகு முதன் முதலில் 1973-ஆம் ஆண்டு திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் அதிமுக சார்பில் மாயத்தேவரை, எம்.ஜி.ஆர். போட்டியிடச் செய்தார். அதிமுக கட்சியின் அரசியல் வரலாற்றில் அந்த கட்சியின் முதல் வேட்பாளர் இவரே. அப்போது மதுரை மாவட்டத்தில் இருந்தது தற்போதைய திண்டுக்கல் மாவட்டம். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுகவிற்கு சின்னம் தேர்வு செய்யவேண்டியிருந்தது. சின்னம் தேர்வு செய்யும் பொறுப்பை வேட்பாளரான மாயத்தேவரிடமே ஒப்படைத்தார் எம்.ஜி.ஆர். அப்போதைய சுயேச்சை சின்னமான இரட்டை இலையை மாயத்தேவர் தேர்வு செய்தார். இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட்ட கே.மாயத்தேவர் அமோக வெற்றிபெற்றார்.
அன்று வெற்றிச் சின்னமாக கண்டறியப்பட்ட இரட்டை இலைச் சின்னம் இன்றும் அதிமுகவின் சின்னமாக தொடர்கிறது. இந்த வெற்றிச் சின்னத்தை அதிமுகவிற்கு கண்டு அறிந்து வழங்கியவர் இறந்த மாயத்தேவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அதிமுகவில் இருந்து விலகிய அவர், திமுகவில் இணைந்து 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். திமுகவில் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தார்.
தொடர்ந்து திமுகவில் பல்வேறு பதவிகளில் செயல்பட்டுவந்தார். இந்நிலையில், இன்று சின்னாளபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பகல் 12.30 மணியளவில் காலமானார். இறந்த கே.மாயத்தேவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், செந்தில்குமரன் என்ற மகனும், சுமதி என்ற மகளும் உள்ளனர். மூத்த மகன் வெங்கடேசன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார்.
இறந்த கே.மாயத்தேவரின் இறுதி யாத்திரை நாளை புதன்கிழமை மாலை சின்னாளபட்டியில் உள்ள அவரது வீட்டில் துவங்கி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இறந்த மாயத்தேவர், பிரதமர்கள் இந்திரா காந்தி, வாஜ்பாய், திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்களின் அன்பை பெற்றவராக இருந்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர்சூழலில் தவித்து வந்த மீனவர்களை மீட்ட மத்திய அரசு - பிரதமர் மோடிக்கு நன்றி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:53:01 AM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களைப் பேசி வருகிறார்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:51:55 PM (IST)

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)


MGR RASIGANAug 10, 2022 - 04:28:56 PM | Posted IP 162.1*****