» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வழக்கில் ஆஜராக வந்த ரவுடியை வெட்டிய மற்றொரு ரவுடி: நீதிமன்றத்தில் பரபரப்பு!
சனி 3, ஜூன் 2023 9:35:51 PM (IST)
ராமநாதபுரம் நீதிமன்றத்தில் தாக்குதல் வழக்கில் ஆஜராக வந்த ரவுடியை நீதிமன்றத்திற்குள் வைத்து மற்றொரு ரவுடி வாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் சிவஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த சந்துரு என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்துருவின் உறவினரான ஆர்.எஸ்.மடையை சேர்ந்த கொக்கி குமார் (இவர் மீதும் கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன) என்பவர், அசோக்குமாரை தேடி சென்றுள்ளார். ஆனால் அசோக்குமார், கொக்கி குமாரிடம் சிக்கவில்லை.
இந்தநிலையில் சந்துரு தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று ராமநாதபுரம் ஜே.எம்.கோர்ட் எண் 2-ல் விசாரணைக்காக அசோக்குமார் வந்ததாக கூறப்படுகிறது. இதற்கென நீதிமன்ற காத்திருப்போர் அறையில் இன்று காலை அசோக்குமார் அமர்ந்திருந்த நிலையில் அங்கு வந்த கொக்கி குமார், அசோக்குமாரை வாளால் வெட்ட முயன்றுள்ளார்.
இதனால் அங்கிருந்து தப்பி ஓடிய அசோக்குமார் நீதிமன்றத்திற்குள் தஞ்சம் புகுந்துள்ளார். அசோக்குமாரை அங்கேயும் துரத்தி சென்ற கொக்கி குமார், நீதிமன்றத்திற்கு உள்ளேயே வைத்து அசோக்குமாரின் தலை, கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் அசோக்குமார் ரத்த வெள்ளத்தில் சரிய அங்கிருந்து கொக்கி குமார் தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்த போலீஸார் நீதிமன்றத்தில் வெட்டுப்பட்டு கிடந்த அசோக்குமாரை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் நீதிமன்ற வளாகத்தில் அதிகளவிலான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நீதிமன்றத்திற்குள் வைத்து ரவுடி ஒருவரை மற்றொரு ரவுடி வாளால் வெட்டிய சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.