» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தம்: பிசிசிஐ அறிவிப்பு

செவ்வாய் 4, மே 2021 3:36:25 PM (IST)

வீரர்கள் அடுத்தடுத்து கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதையடுத்து, 2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் விருதிமான் சாஹா உள்ளிட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். வீரர்கள் அடுத்தடுத்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, வேறு வழியின்றி ஐபிஎல் டி20 தொடர் இந்த சீசனில் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று நடக்க இருந்த கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜிக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அனைத்து வீரர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் நாளை நடக்க இருந்த சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியுடன் மும்பை அணி மோதியது. இந்த ஆட்டத்தின் இடையே பாலாஜியுடன் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பலரும் சந்தித்துப் பேசியுள்ளனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியினர் மத்தியிலும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜியுடன் மும்பை அணியின் பல வீரர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். பொதுவாக கரோனா தொற்றின் அறிகுறி 6 முதல் 7-வது நாளில்தான் தெரியவருகிறது. இந்தச் சூழலில் இன்று சன்ரைசர்ஸ் அணியுடனான ஆட்டத்தை ரத்து செய்ய மும்பை அணி தரப்பில் கோரப்பட்டு இருந்தது.

ஆனால், சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹாவுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. டெல்லி கேபிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ராவுக்கும் தொற்று உறுதியானது. பிசிசிஐ நிலையான வழிகாட்டுதலின்படி, கரோனாவில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் வீரர்கள் யாரேனும் தொடர்பில் இருந்திருந்தால், அவர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், 3 முறை நடக்கும் கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வர வேண்டும்.

ஏற்கெனவே சிஎஸ்கே வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இப்போது மேலும் 3 அணிகள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படும்போது, போட்டிகளைத் தொடர்ந்து நடத்துவது இயலாது என்பதால், ஐபிஎல் டி20 தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், "2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 சீசன் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ஒவ்வொரு அணி நிர்வாகத்தினர், ஒளிபரப்பாளர்களுடன் பேசி வருகிறோம். நாட்டில் உள்ள சூழல், மக்கள் மனநிலை ஆகியவற்றைக் கவனிப்பதால், தற்காலிகமாக ஐபிஎல் தொடரை ஒத்திவைக்கிறோம். இந்த மாதத்தில் ஐபிஎல் தொடரை நடத்த வாய்ப்பில்லை.

வீரர்களின் உடல்நிலை பிசிசிஐக்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். விரைவில் மீண்டும் கூடி தொடர் குறித்தும், எப்போது தொடரை முடிப்பது என்றும் முடிவு செய்வோம்” எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory