» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பேட்மிண்டன் தகுதி சுற்று போட்டிகள் ரத்து: ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் ஒலிம்பிக் கனவு தகர்ந்தது!
சனி 29, மே 2021 5:26:22 PM (IST)
பேட்மிண்டன் தகுதி சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்திய நட்சத்திரங்கள் ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் ஆகியோரின் ஒலிம்பிக் கனவு தகர்ந்துள்ளது.
32-வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதில் பேட்மிண்டனுக்கான கடைசி மூன்று தகுதி சுற்றாக இந்திய ஓபன், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஓபன் ஆகிய போட்டிகள் நடக்க இருந்தன. இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலால் இந்த மூன்று போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதனால் இந்த போட்டிகளில் பங்கேற்று தங்களது தரவரிசையில் முன்னேற்றம் கண்டு ஒலிம்பிக் வாய்ப்பை பெற காத்திருந்த வீரர், வீராங்கனைகள் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.
ஆனால் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறுவதற்கான தரவரிசை முறையில் மாற்றம் ஏதும் செய்யப்படாது என்றும் தகுதி சுற்றுக்கான காலஅவகாசம் ஜூன் 15-ந்தேதி வரை இருந்தாலும் அதற்குள் மேலும் சில தகுதி சுற்று பேட்மிண்டன் போட்டிகள் நடத்தும் திட்டம் இல்லை என்று சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இதனால் இந்திய முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவரான இந்திய நட்சத்திர வீராங்கனை 31 வயதான சாய்னா நேவால் ஆகியோரின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது.
பேட்மிண்டன் தகுதி சுற்று விதிமுறைப்படி ஒற்றையர் தரவரிசையில் டாப்-16 இடங்களில் உள்ளவர்கள் மட்டுமே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும். அந்த வகையில் இந்திய பேட்மிண்டன் தரப்பில் பி.வி.சிந்து, சாய்பிரனீத், ஆண்கள் இரட்டையர் ஜோடியான சிராக் ஷெட்டி- சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி ஆகியோர் மட்டும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.