» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகல்!
ஞாயிறு 16, ஜனவரி 2022 10:48:22 AM (IST)
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார்.
சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை விராட் கோலி அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து ஏற்கனவே விராட் கோலி விலகியது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி கோலி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய அணியின் கேப்டனாக நீண்ட நாளாக பணியாற்ற வாய்ப்பு அளித்தமைக்காக பி.சி.சி.ஐ.க்கு நன்றி. இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த நான் தகுதியானவன் என, என் மீது நம்பிக்கை வைத்த எம்.எஸ். டோனிக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்ட செய்தியில், விராட் கோலியின் தலைமையில் இந்திய அணியானது கிரிக்கெட்டின் அனைத்து நிலைகளிலும் விரைவான வளர்ச்சியை அடைந்தது. அவரது முடிவு தனிப்பட்ட ஒன்று. அதனை பி.சி.சி.ஐ. பெரிய அளவில் மதிக்கிறது. இந்த அணியை வருங்காலத்தில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய நபராக அவர் இருந்திடுவார். ஒரு சிறந்த வீரர் என குறிப்பிட்டு உள்ளார்.