» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரஹானே, புஜாரா குறித்து முடிவெடுக்க வேண்டியது என் வேலையில்லை : விராட் கோலி கருத்து

திங்கள் 17, ஜனவரி 2022 5:19:41 PM (IST)

ரஹானே, புஜாரா இருவரும் அணியில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டியது என்னுடைய வேலையில்லை என்று கேப்டன் விராட் கோலி கருத்துதெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. கடைசி இரு போட்டிகளிலும் பேட்டிங்கில் மோசமாகச் செயல்பட்டதன் காரணமாகவே இந்திய அணி தோல்வி அடைந்தது என்ற பரவலான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதிலும் மூத்த வீரர்கள் ரஹானே, புஜாரா இருவரும் டெஸ்ட் தொடர் முழுவதும் மோசமாகச் செயல்பட்டனர், இருவரும் 25 ரன்கள் சராசரியைக் கூட தாண்டவில்லை.

இருவருக்கும் இந்தத் தொடர் கடைசி வாய்ப்பாக இருக்கும் எனக் கூறப்பட்டபோதிலும் இருவரும் சிறப்பாகச் செயல்படாததால் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.இந்நிலையில் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ''கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங் மோசமாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறோம், அந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்ப ஓட விரும்பவில்லை. இதுகுறித்து அமர்ந்து பேச வேண்டும், எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று ரஹானே, புஜாராவிடம் பேசலாம். ஆனால், எதிர்காலத்தில் நடக்கும் டெஸ்ட் தொடரில் இருவரும் அணியில் நீடிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து நான் தீர்மானிக்க முடியாது, அது என்னுடைய வேலையும் இல்லை. அது தேர்வாளர்களின் பணி, கேப்டனின் பணி அல்ல.

இதுகுறித்து தேர்வாளர்கள்தான் பேச வேண்டும், அவர்கள் என்ன நினைத்து வைத்திருக்கிறார்கள் என எனக்குத் தெரியாது. நான் ஏற்கெனவே சொன்னது போன்று, ரஹானே, புஜாராவுக்கு ஆதரவாகத் தொடர்ந்து இருப்போம், ஏனென்றால் இருவரும் கடந்த காலங்களில் அதிகமான பங்களிப்பு செய்துள்ளார்கள். 2-வது டெஸ்ட் போட்டியில் இருவரும் சேர்ந்து முக்கியமான பார்ட்னர்ஷிப்பை வழங்கினார்கள், அதனால்தான் நல்ல ஸ்கோரும் கிடைத்தது. 

இதுபோன்ற செயல்பாட்டை நாம் அங்கீகரிக்க வேண்டும். ஆனால், தேர்வாளர்கள் மனதில் என்ன நினைத்து வைத்திருக்கிறார்கள், என்ன முடிவு எடுப்பார்கள் என்று இங்கு அமர்ந்து கொண்டுநான் பேச முடியாது''. இவ்வாறு கோலி தெரிவித்தார். இதன் மூலம் அணியிலிருந்து ரஹானே, புஜாரா நீக்கப்படுவார்கள் என்றும், தேர்வுக் குழுவினர் எடுக்கும் முடிவில் நான் தலையிட முடியாது. என்னிடம் கருத்து கேட்டாலும் நான் ஒதுங்கிக்கொள்வேன் என்பதை கேப்டன் கோலி சூசகமாகத் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory