» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
விராட் கோலிக்கு நிச்சயம் ஓய்வு தேவை: ரவி சாஸ்திரி
புதன் 27, ஏப்ரல் 2022 4:17:49 PM (IST)
விராட் கோலிக்கு நிச்சயம் ஓய்வு தேவை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 128 ரன்கள் எடுத்துள்ளார் கோலி. அந்த அணியின் முன்னாள் கேப்டனான அவர் நடப்பு தொடரில் அதிகபட்சமாக ஒரே ஒரு போட்டியில் 48 ரன்கள் எடுத்திருந்தார். ஐந்து போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகியுள்ளார் அவர். இதில் இரண்டு டக் அவுட்கள் அடங்கும். இத்தகைய சூழலில் தான் ரவி சாஸ்திரி இதனை வலியுறுத்தியுள்ளார்.
"அவருக்கு இப்போது நிச்சயம் ஓய்வு தேவை என நான் கருதுகிறேன். அதுதான் சரியானதாகவும் இருக்கும். ஏனெனில் அவர் தொடர்ச்சியாக ஓய்வே இல்லாமல் கிரிக்கெட் விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆக்டிவாக இயங்க அவருக்கு இந்த ஓய்வு தேவை. ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து அவர் வெளிவர வேண்டும். இதனை நான் கோலிக்கு மட்டும் சொல்லவில்லை. இந்திய அணிக்காக விளையாடும் அனைவருக்கும் சொல்கிறேன்.
ஓய்வு நிச்சயம் தேவை. இந்தியா கிரிக்கெட் விளையாடாத நேரம் என்றால் அது ஐபிஎல் சீசன் தான். அதனால் ஒவ்வொரு வீரரும் தங்களது ஓய்வு நேரத்தை திட்டமிட வேண்டும். 'நான் தொடரின் ஒரு பாதியில் மட்டுமே விளையாடுவேன். எனக்கு அதற்கான ஊதியம் கொடுத்தால் போதும்', என பிரான்சைஸ் அணி நிர்வாகத்திடம் வீரர்கள் தயக்கமின்றி இதனை சொல்ல வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் அசத்த இது மாதிரியான கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்" என சாஸ்திரி தெரிவித்துள்ளார்.