» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சூர்யகுமார் யாதவ் - கோலி அதிரடி: ஆஸிக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா!

திங்கள் 26, செப்டம்பர் 2022 10:56:08 AM (IST)



ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தலா ஒரு வெற்றியை பெற்று தொடரை 1-1 என சமன் செய்தன. இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி நேற்று இரவு ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார். 

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக அந்த அணி சார்பில் களம் இறங்கி இருந்தனர். முதல் ஐந்து ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்களை குவித்தது அந்த அணி. கேமரூன் கிரீன் 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். 19 பந்துகளில் அரை சதம் பதிவு செய்தார் அவர். இந்திய அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிவேக அரை சதம் இது. 

ஃபின்ச், ஸ்மித், மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்திருந்தனர். பின்னர் வந்த இங்க்லீஸ் 22 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து வந்த மேத்யூ வேட், 1 ரன் எடுத்து அவுட்டானார். கடைசி ஓவர் வரை பேட் செய்த டீம் டேவிட், 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆஸ்திரேலிய அணிக்காக அவர் பதிவு செய்துள்ள முதல் அரை சதம் இது. டேனியல் சாம்ஸ், 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியா சார்பில் அக்சர் படேல் (3 விக்கெட்), புவனேஷ்வர், சஹால் மற்றும் ஹர்ஷல் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.

இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. கேப்டன் ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். ராகுல் முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். கேப்டன் ரோகித் 17 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலியும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் 62 பந்துகளில் 104 ரன்கள் எடுத்திருந்தனர்.

சூர்யகுமார் யாதவ், 36 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அவுட்டானார். தலா 5 பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் இதில் அடங்கும். கோலி தனது 33-வது டி20 கிரிக்கெட் அரை சதத்தை பதிவு செய்தார். கடைசி 4 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் கோலி மற்றும் பாண்டியா இருந்தனர். இறுதி ஓவர் வரை ஆட்டம் சென்றது. கடைசி ஓவரை டேனியல் சாம்ஸ் வீசி இருந்தார். முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார் கோலி. 

அதன் மூலம் 5 பந்துகளில் 5 ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது.  ஆனால் இரண்டாவது பந்தில் கோலி அவுட்டானார். அவர் 47 பந்துகளில் 63 ரன்களை எடுத்திருந்தார். தொடர்ந்து தினேஷ் கார்த்திக் களத்திற்கு வந்திருந்தார். ஐந்தாவது பந்தில் பவுண்டரி விளாசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார் ஹர்திக். 19.5 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஹர்திக் 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory