» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி!
வெள்ளி 27, ஜனவரி 2023 4:58:59 PM (IST)
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதன் அரை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 5 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதனையடுத்து ஜார்ஜியா ப்ளிம்மர் - இசபெல்லா ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இசபெல்லா 26 ரன்னில் பார்ஷவி சோப்ரா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்த வந்த கேப்டன் இஸி ஷார்ப் 13 ரன்னிலும் நிதானமாக விளையாடி வந்த ஜார்ஜியா 35 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் பார்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க முதல் இந்திய அணி அதிரடியாக விளையாடியது.சிறப்பாக விளையாடிய தொடக்க வீராங்கனை ஸ்வேதா செஹ்ராவத் அரைசதம் அடித்தார். இதனால் 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்து இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.