» சினிமா » செய்திகள்

விவேக் மரணம் மிகப்பெரிய இழப்பு : சுந்தர்.சி வேதனை

திங்கள் 11, அக்டோபர் 2021 11:52:47 AM (IST)



நடிகர் விவேக்கின் மரணம் மிகப்பெரிய இழப்பு என்று அரண்மனை 3 பத்திரிகையாளர் சந்திப்பில் சுந்தர்.சி பேசினார்.

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அரண்மனை 3. இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் அக்டோபர் 14-ம் தேதி வெளியிடுகிறது. இதனை முன்னிட்டுப் படத்தை விளம்பரப்படுத்த அரண்மனை 3 படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்கள்.

இந்தச் சந்திப்பில் இயக்குநர் சுந்தர்.சி பேசியதாவது: "உண்மையில் ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பது மிகவும் கடினம். ஏனென்றால் புதிதாக ஒரு படம் எடுத்தால், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ரசிகர்கள் படத்துக்கு வருவார்கள். ஆனால் 2-ம் பாகம், 3-ம் பாகம் என எடுக்கும்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பது இருக்க வேண்டும். ஆனால், அது வேறு மாதிரி இருக்க வேண்டும். அதுதான் எங்களுடைய சவால்.

அரண்மனை படங்கள் என்பது தயாரிப்பாளராக எனக்கு லாபகரமான படங்கள். ஆனால், நினைத்தவுடன் உடனே இயக்க முடியாது. நல்ல கதை, காமெடி எல்லாம் அமைய வேண்டும். அரண்மனை 3 படத்துக்கு நல்ல கதை, நடிகர்கள் எல்லாம் அமைந்தார்கள். முதலில் ஆர்யாவுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவர் தயாரிப்பாளர்களின் நடிகர். இப்போது வரை படத்தின் வியாபாரம் உள்ளிட்டவற்றிலும் பக்கபலமாக இருக்கிறார். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸை மட்டும் 15 நாட்கள் படமாக்கினோம். ஆர்யா - ராஷிகண்ணா இருவருமே கஷ்டப்பட்டு நடித்தார்கள்.

அரண்மனை படங்களில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதேபோல் இதிலும் ஆண்ட்ரியா, ராஷி கண்ணா மற்றும் சாக்‌ஷி அகர்வால் ஆகியோருக்கு நல்ல கதாபாத்திரங்களும், காமெடியும் அமைந்துள்ளன. இதில் விவேக் சார், யோகி பாபு ஆகியோர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இது விவேக் சாருடைய கடைசிப் படமாக இருக்கும் என நினைக்கவில்லை. குஜராத்தில் 25 நாட்கள் ஒரு குடும்பமாக இருந்தோம். எங்களுக்கு எல்லாம் உடல்நிலை குறித்து நிறைய அட்வைஸ் செய்வார். இயக்குநராக, நடிகராக விவேக் சாருடன் நிறைய படங்களில் பயணப்பட்டுள்ளேன். ஆகையால், நிறைய நினைவுகள் உள்ளன. விவேக் சாருடைய இழப்பு மிகவும் பெரியது.



அரண்மனை முதல் பாகத்தை உதயநிதி சார்தான் வெளியிட்டார். படம் எப்படிப் போகுமோ என்ற டென்ஷனில் இருந்தபோது, முதல் நாளில் பூங்கொத்து கொடுத்து படம் சூப்பட் ஹிட் என்று சொன்னவர் உதயநிதி சார். இப்போது அரண்மனை 3 படத்தையும் உதயநிதி சார்தான் வெளியிடுகிறார். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ரொம்ப நன்றாகவுள்ளது என்று சொன்னார். ரொம்பவே சந்தோஷப்பட்டேன்". இவ்வாறு சுந்தர்.சி பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory