» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்: திருச்செந்தூரில் பரபரப்பு

சனி 7, ஜூன் 2025 9:49:10 PM (IST)



திருச்செந்தூரில் வாலிபரை தாக்கியதாக போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோட்டைத்தெருவை சேர்ந்தவர் பட்டுஇசக்கி (36). பெயிண்டிங் தொழிலாளி. இவர் நேற்று இரவு வேலையை முடித்து விட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள டீக்கடையில் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ், ஏன் இங்கு கூட்டமாக நிற்கிறீர்கள்? என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் வேலை பார்த்துவிட்டு கூலி வாங்குவதற்காக நின்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து அவர்களின் மோட்டார் சைக்கிள்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் அபராதம் விதிக்க முயன்றுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், நின்று கொண்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கு எப்படி அபராதம் விதிப்பீர்கள்? என கேள்வி கேட்டுள்ளனர். இதில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

வாக்குவாதம் முற்றியதில் பட்டு இசக்கியை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்களும், அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களும் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர்-மதுரை-நெல்லை சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

இது குறித்து தகவலறிந்த தாலுகா இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் இரவு சுமார் 7 மணி முதல் 8 மணி வரை 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து

முட்டாள்Jun 9, 2025 - 06:12:20 PM | Posted IP 172.7*****

ரோட்டை நிற்பவரை கண்டால் வீட்டுக்கு போக சொல்லவேண்டியது தானே?? சில ஊர் சுற்றும் போலீசாருக்கு அடிக்க, சண்டைபோட, (சாத்தான்குளம் பாணியில்) கொலை செய்ய, துட்டு பிடுங்க, அப்பாவி மக்களை வீரத்தை காட்ட மட்டும் தான் தெரியும். ஒரு MLA அரசியல்வாதி ஆட்கள் ரோட்டை நின்றால் சலூட் அடிக்க மட்டும் தெரியும். அவ்வளவுதான்

MAkkALJun 8, 2025 - 11:30:01 PM | Posted IP 172.7*****

இரவு பத்து மணிக்கு மேலாக விழாக்களில் ஒலி பெருக்கிகள் பயன் படுத்தாமலிருக்க SB அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? பள்ளிமாணவர்கள் குழந்தைகள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்படுவார்களே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory