» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காதல் தோல்வியால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை: கோவில்பட்டியில் பரிதாபம்!

வியாழன் 11, செப்டம்பர் 2025 8:16:36 AM (IST)

கோவில்பட்டியில் காதல் தோல்வியால் விரக்தியடைந்த வாலிபர் தனது நண்பருக்கு வாட்ஸ்-அப் மூலம் உருக்கமான ஆடியோ அனுப்பிவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ரவி பாண்டியன் மகன் சக்தி கணேஷ் (22). கட்டிட தொழிலாளி. இவர் அதேபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறொருவரை திருமணம் முடித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த சக்தி கணேஷ் வேலைக்கு சரிவர செல்லாமல் தனிமையிலேயே இருந்துள்ளார். 

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தனது நண்பரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், நண்பர் போனை எடுக்கவில்லை. இதனால் அவருக்கு சக்திகணேஷ் வாட்ஸ்-அப் மூலம் ஆடியோவாக பேசி அனுப்பியுள்ளார். அதில் ‘‘அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் பார்ப்போம். உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. எதுவும் நினைத்துக் கொள்ளாதே. எல்லாம் முடிந்துவிட்டது, அவ்வளவுதான்.

நீ காலையில் போனை எடுத்து பார்க்கும்போது தனியார் கல்லூரி அருகே உள்ள தண்டவாளத்தில் இருப்பேன். என்னை வந்து பார்’’ என்று உருக்கமாக ஆடியோவில் பேசியுள்ளார். ஆனால் நண்பர் தூங்கிவிட்டதால் செல்போனை பார்க்கவே இல்லை. இதையடுத்து சக்தி கணேஷ் கோவில்பட்டி அருகே உள்ள பெத்தேல் ரயில்வே கேட் அருகில் உள்ள தண்டவாளப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த ரயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது உடல் ரயிலில் சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டு, 2 துண்டாக சிதைந்து கிடந்தது. நேற்று காலை 8 மணியளவில் அந்தப் பகுதி வழியாக வந்தவர்கள் ரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே சக்தி கணேசின் நண்பர் காலையில் செல்போனை எடுத்து பார்த்தபோதுதான், அவர் அனுப்பிய உருக்கமான ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் சக்தி கணேசின் பெற்றோருக்கு தகவல் அளித்தார். இதன்பேரில் அவரது பெற்றோர் பதறியடித்துக்கொண்டு பெத்தேல் ரயில்வே கேட் பகுதிக்கு சென்றனர்.

அங்கு சிதைந்து கிடந்த தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து சக்தி கணேசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory