திருநெல்வேலி மாவட்டம், மானூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் மானூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (11.09.2026) பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்தின் சோதனை ஓட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன், ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ள பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்துவது தொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் 352 பள்ளிகளில் சோதனை ஓட்டம் (Trial Run) இன்று நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் மானூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆனந்த் மோகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, காலை உணவின் தரம், சுவை குறித்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி, ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் 352 பள்ளிகளில் 32,734 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. மாநகராட்சி 50 பள்ளிகளிலும், நகராட்சிகளில் 25 பள்ளிகளிலும், பேரூராட்சிகள் 58 பள்ளிகளிலும், கிராமப்புறங்களில் 219 பள்ளிகள் என மொத்தம் 352 பள்ளிகளில் நடைபெற்றது. இதில், 136 அரசுப்பள்ளிகளும், 216 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெற்றனர்.

ஏற்கனவே, 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை 1014 பள்ளிகளில் 45,753 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆய்வில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பொன்னியின் செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அருணா தேவி, மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.