காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசினார். அப்போது திமுக ஊழல்கள் செய்ததாக அமலாக்கத்துறை கூறியதாக ஆதாரத்துடன் பேசினார். இதையடுத்து, இதற்கு பதில் பேச எதிர்க்கட்சிக்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். இதனால் திமுகவினர் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது; ”தவெகவின் 114 நாட்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதை ஆதாரமாக கூறினோம். முதல்-அமைச்சர் இன்று மொத்தம் 45 நிமிடங்கள் பேசினார். 10 நிமிடங்கள் காவல்துறை சாந்து கூறினார். அதன் பின்னர் எந்தவித ஆதாரமுமின்றி எங்கள் மீது குற்றச்சாட்டுகளை முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்தார். நானும், சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து, எங்களுக்கு பதில் கூற வாய்ப்பு வழங்குங்கள் என சபாநாயகரிடம் கூறினோம். ஆனால் எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதனால் எங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்துள்ளோம். எங்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் பதில் கூறவில்லை. 3 நாட்கள் நேரமுள்ளது. மனப்பாடம் செய்துவிட்டு, ஒப்புவித்தல் போட்டி மாதிரி முதல்-அமைச்சர் பேசியுள்ளார். பஞ்ச் டயலாக், சினிமா வசனம் போன்றவைதான் அதில் இருந்தது.
முதல்-அமைச்சர் விஜய்யின் உதவியாளர் விஷ்ணு கனமவளங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதனை விரைவில் வெளியிடுவேன். திமுக ஆட்சியில் வழக்கு இருப்பதை கூறுகிறார். சென்னையில் பட்டப்பகலில் கொலை நடந்துள்ளது. இதற்கெல்லாம் பதில் கூறாமல் 1970க்கு சென்றுவிட்டார். மிசாவை பற்றி பேச இவருக்கு தகுதி கிடையாது. சர்க்காரியா கமிஷன் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா? இவர் அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்து.
அமலாக்கத்துறை கூறியது வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே. அவை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. சர்க்காரியா கமிஷனுக்கு பிறகு திமுக 3 முறை ஆட்சிக்கு வந்துள்ளது. அவர்கள் தரப்பு அமைச்சர்கள் மீதும் வழக்குகள் உள்ளது. நாங்கள் பயந்துவிடுவோம் என்பதற்காக முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் சோதனை நடந்தது. 6 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில் அங்கு ஒன்றும் சிக்கவில்லை. மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்.” இவ்வாறு அவர் பேசினார்.

