» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அபாயகர இரசாயனங்கள் ஏற்றிவந்த சரக்கு கப்பல் கேரள கடலில் மூழ்கியது: 24 ஊழியர்கள் மீட்பு
திங்கள் 26, மே 2025 12:48:47 PM (IST)

கேரள கடல் பகுதியில் அபாயகரமான ரசாயனங்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் மூழ்கிய நிலையில், மாலுமிகள் உட்பட 24 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து லைபீரியாவை சேர்ந்த சரக்கு கப்பல் கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டது. இந்த கப்பலில் 100 கன்டெய்னர்கள் இருந்தன. இதில் 13 கன்டெய்னர்களில் அபாயகரமான ரசாயனங்களும் 12 கன்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்தது. மேலும் 84.44 மெட்ரிக் டன் டீசல், 367.1 மெட்ரிக் டன் பர்னஸ் ஆயிலும் சரக்கு கப்பலில் கொண்டு செல்லப்பட்டது.
இந்த சரக்கு கப்பல் நேற்று முன்தினம் கொச்சியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் இருந்தது. அப்போது கப்பல் ஒருபக்கமாக சாயத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் இந்திய கடலோர காவல் படை மற்றும் கடற்படையை சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கப்பலில் பணியாற்றிய 21 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 3 பேர் சரக்கு கப்பலில் தொடர்ந்து தங்கியிருந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கப்பல் கடலில் மூழ்காமல் இருக்க 3 பேரும் அதிதீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து கடற்படையின் ஐஎன்எஸ் சுஜாதா கப்பலை சேர்ந்த வீரர்கள் நேற்று மீதமிருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதன்பிறகு சரக்கு கப்பல் முழுமையாக கடலில் மூழ்கியது.
சரக்கு கப்பலில் அபாயகரமான ரசாயனங்கள் இருப்பதால் சுமார் 20 கடல் மைல் தொலைவுக்குள் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரசாயனங்கள், டீசல், பர்னஸ் ஆயில் ஆகியவை கேரள கடல் பகுதியில் கலந்து வருகின்றன. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறிய ரக விமானம் மூலம் கடலில் தடுப்பு ரசாயனங்கள் தெளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கேரள அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த 24 பேர் லைபீரிய சரக்கு கப்பலில் பணியாற்றினர். அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். என்ன காரணத்துக்காக சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக கப்பலின் மாலுமிகள், பொறியாளர்களிடம் விசாரித்து வருகிறோம்.
கேரள கடல் பகுதியில் அபாயகரமான ரசாயனங்கள், டீசல், பர்னஸ் ஆயில் கலந்து வருகிறது. இதனால் எர்ணாகுளம், ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளின் கடல் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பகுதிகளில் கன்டெய்னர்கள் கரை ஒதுங்கும் அபாயமும் இருக்கிறது. எனவே மீனவர்கள், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கேரள தலைமைச் செயலாளர் ஜெயதிலக் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். கேரள கடல் பகுதியில் கலந்திருக்கும் அபாயகரமான ரசாயனங்கள், எண்ணெயை அகற்றுவது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கடலோர காவல் படையை சேர்ந்த சாக்சம் என்ற கப்பல், எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்னர். கடற்படையின் கண்காணிப்பு விமானம் மூலம் கடலில் தடுப்பு ரசாயனம் தெளிக்கப்படுகிறது. எர்ணாகுளம், ஆலப்புழா கடல் பகுதிகள், கடற்கரைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன என்று கேரள அரசு அதிகாரிகள் கூறினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மைனர் பெண்ணை கடத்திக் கொன்று ட்ராலி பேக்கில் வைத்து உடல் வீச்சு : காதலன் உட்பட 7 பேர் கைது!
புதன் 4, ஜூன் 2025 5:21:16 PM (IST)

கமல்ஹாசன் மீது நாங்கள் மென்மையான போக்கை காட்டவில்லை : கர்நாடக துணை முதல்வர்
புதன் 4, ஜூன் 2025 12:47:26 PM (IST)

18வது சீசனில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி : தேர்தல் ஆணையம் நூதன முறையில் வாழ்த்து!
புதன் 4, ஜூன் 2025 11:12:21 AM (IST)

சிறுமி பலாத்காரம்... உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் மரணம்: ராகுல் கண்டனம்
செவ்வாய் 3, ஜூன் 2025 5:10:20 PM (IST)

நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா? கமல் ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
செவ்வாய் 3, ஜூன் 2025 12:45:30 PM (IST)

தக் லைப் தடை விவகாரம்: கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு முதல்வர் சித்தராமையா ஆதரவு!
திங்கள் 2, ஜூன் 2025 4:34:43 PM (IST)
