» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை: மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

வியாழன் 8, ஜனவரி 2026 4:38:10 PM (IST)

கொல்கத்தாவில் அரசியல் ஆலோசனை நிறுவனமான ‘ஐ-பேக்’ அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியயதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘ஐ-பேக்’ I-PAC நிறுவனத்தின் இயக்குநரான பிரதிக் ஜெயின், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவராக உள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆலோசனை வழங்கக்கூடிய நிறுவனமாகவும், அந்த கட்சியின் தகவல் தொழில்நுட்ப மற்றும் ஊடகப் பிரிவை கவனித்துக் கொள்ளக்கூடிய நிறுவனமாகவும் ‘ஐ-பேக்’ உள்ளது.

இந்நிலையில், கொல்கத்தாவின் லோடன் தெருவில் உள்ள பிரதிக் ஜெயினின் இல்லம், ‘ஐ-பேக்’நிறுவனத்தின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

இதையடுத்து, பிரதிக் ஜெயினின் வீட்டுக்குச் சென்ற திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, பின்னர் வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘‘அமலாக்கத் துறையினரின் இந்த சோதனை நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது; அரசியலமைப்புக்கு எதிரானது.

அவர்கள் எங்கள் கட்சியின் ஆவணங்களையும் சட்டமன்றத் தேர்தலுக்கான எங்கள் வேட்பாளர்களைப் பற்றிய விவரங்களையும் கொண்ட ஹார்ட் டிஸ்குகளை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர்.

நான் அவற்றை அவர்களிடம் இருந்து மீட்டுக் கொண்டு வந்தேன். அரசியல் கட்சியின் தரவுகளைச் சேகரிப்பது அமலாக்கத்துறையின் கடமையா?. இதற்கும், நிதி முறைகேடு தொடர்பான விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. உள்துறை அமைச்சர் நாட்டை பாதுகாப்பவரைப் போல அல்லாமல், மிகவும் மோசமான அமைச்சரைப் போல நடந்து கொள்கிறார்’’ என குற்றம் சாட்டினார்.

அமலாக்கத்துறையின் விசாரணையில் மம்தா பானர்ஜி தலையிட்டுள்ளதாகவும் இது சட்டத்துக்கு விரோதமான செயல் என்றும் பாஜக மூத்த தலைவரும் மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, ‘‘அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ளும் இடத்துக்குள் முதல்வர் மற்றும் கொல்கத்தா காவல் ஆணையர் வருவது நெறிமுறையற்றது. இது அரசியலமைப்புக்கு விரோதமானது. மத்திய அமைப்பின் விசாரணையில் நேரடியாக தலையிடும் முயற்சி இது’’ என குற்றம் சாட்டினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory