» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் கருவைக் கலைக்க காலக்கெடு தேவையில்லை!

வியாழன் 30, ஏப்ரல் 2026 4:46:58 PM (IST)

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் கருக்கலைப்பு செய்வதற்கு எவ்வித காலக்கெடுவையும் விதிக்கக் கூடாது என்றும், இக்கட்டான சூழலில் சட்ட நடைமுறைகளை விடப் பாதிக்கப்பட்டவரின் நலனே முக்கியம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போதைய சட்டப்படி 20 முதல் 24 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்யப் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் 20 வாரங்களுக்குப் பிறகும் தங்களின் தேவையற்ற கருவைக் கலைக்க அனுமதிக்கும் வகையில், மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத்தில் (MTP Act) திருத்தம் செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவரின் 30 வார காலக் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி எய்ம்ஸ்மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மருத்துவமனையின் வாதம்

எய்ம்ஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்தக் கருவைக் கலைத்தால், அது கடுமையான குறைபாடுகளுடன் கூடிய உயிரோடு பிறக்கும் குழந்தையாகத்தான் இருக்கும். மேலும், 15 வயது சிறுமிக்கு இது வாழ்நாள் முழுவதும் உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும்; எதிர்காலத்தில் அவர் குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனையும் பாதிக்கலாம்" என்று வாதிட்டார்.

மருத்துவமனையின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட சிறுமியின் மனநிலை மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பின்வரும் முக்கிய கருத்துகளைப் பதிவு செய்தனர்: தேவையற்ற கர்ப்பத்தை ஒரு நபர் மீது திணிக்க முடியாது. பாதிக்கப்பட்டவர் ஒரு சிறுமி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர் இப்போது கல்வி கற்க வேண்டிய வயதில் இருக்கிறார். ஆனால், நாம் அவரை ஒரு தாயாக்க விரும்புகிறோம்.

இந்த விவகாரத்தில் அந்தச் சிறுமி அனுபவித்த வலியையும், அவமானத்தையும் நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டும். அவருக்கு ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்புகளுடன், இந்தத் தேவையற்ற கர்ப்பம் கூடுதல் சுமையாகும். தத்தெடுப்பதற்கு ஏற்கனவே நம் நாட்டில் பல குழந்தைகள் உள்ளனர். ஆதரவற்றுக் கைவிடப்பட்ட குழந்தைகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதே நேரத்தில், ஒரு சிறுமியின் வாழ்வைச் சிதைக்க அனுமதி முடியாது.

"சட்டம் என்பது தேங்கி நிற்கும் ஒன்றல்ல; அது கால மாற்றத்திற்கேற்ப இயல்பானதாகவும், மனிதநேய மிக்கதாகவும் அமைய வேண்டும்" என்று கூறி, சிறுமியின் கருவைக் கலைக்க வழங்கிய அனுமதியை நீதிமன்றம் உறுதி செய்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory