» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு: தமிழகத்தின் திட்டங்கள் குறித்து கோரிக்கை!

புதன் 27, மே 2026 5:15:56 PM (IST)



தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றடைந்த தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, டெல்லி விமான நிலையத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய்க்கு, திகார் சிறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு காவல் துறை சிறப்புப் படையணி சார்பில் கௌரவ அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

இதன் பின்னர், டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 'சேவா தீர்த்' அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்குப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு இதுவாகும்.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, தமிழகத்தின் முக்கியத் திட்டங்களுக்கான கோரிக்கை மனுவைப் பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.  இந்த சந்திப்பின் போது பிரதமர் தனது நெதர்லாந்து பயணத்தின் போது ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்ததற்காக முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையை வழங்க வேண்டும். தமிழகத்தில் வான்வழி அமைப்புமையம் (சிஏபிஎஸ்) அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.

தவிர, கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணைத் திட்டத்துக்கான பூமி பூஜையை நடத்த உள்ளதாக கர்நாடக துணை முதல்வர் அறிவித்தது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் எதிரானது. தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துக்கும், நீர்வள ஆணையத்துக்கும் பிரதமர் அறிவுறுத்த வேண்டுமென முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோல், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. 2026-ம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தற்போது 58 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர். 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே, அந்த மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனே விடுவிக்க இலங்கை அரசை, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று முதல்வர் விஜய், பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் முதல்வர் விஜய் நேற்று சந்தித்துத் தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடுகள், ரயில்வே திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இன்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசியத் தலைவர்களை முதல்வர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory