» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராஜஸ்தானில் அதிர்ச்சி: கடத்தப்பட்ட 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

திங்கள் 29, ஜூன் 2026 11:51:00 AM (IST)

ராஜஸ்தானில் 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, சட்டவிரோத தங்கும் விடுதியில் அடைக்கப்பட்டுப் பலரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விடுதி உரிமையாளர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த வாரம் தனது வீட்டில் இருந்து திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த சில தங்கும் விடுதிகளில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அமைக்கப்பட்ட தனிப்படையினர், அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் அதிரடி சோதனை நடத்திச் சிறுமியைப் பத்திரமாக மீட்டனர்.

போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி (FIR), ரிக்ஷா தொழிலாளி ஒருவன் அச்சிறுமியைக் கடத்திச் சென்று, ஸ்ரீ கங்காநகரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கும் விடுதி ஒன்றின் உரிமையாளருக்கு விற்றுள்ளான். சிறுமியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்த விடுதி உரிமையாளர், அப்பகுதியிலுள்ள வேறு சில தங்கும் விடுதி உரிமையாளர்களுடனும் மேலாளர்களுடனும் இணைந்து, ஐந்து நாட்களாகச் சிறுமியைத் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில், "தொடர்ச்சியாகவும், அடுத்தடுத்துப் பலராலும் நடத்தப்பட்ட வன்கொடுமையால் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான வலியை அனுபவித்தேன். நான் கதறி அழுதபோதெல்லாம், அவர்கள் என்னை மிரட்டி, கட்டாயப்படுத்தி மதுவைக் குடிக்க வைத்தனர்" என்று தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இக்குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய ரிக்ஷா ஓட்டுநர், விடுதி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சட்டவிரோத விடுதிகளை மூடக் கோரி போராட்டம்:

ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் பிரபலமான சுற்றுலாத் தலம் இல்லை என்ற போதிலும், இந்த மாவட்ட எல்லைக்குள் முறையான அனுமதியின்றி 150க்கும் மேற்பட்ட சட்டவிரோத தங்கும் விடுதிகள் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டு வருவது இச்சம்பவத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து சட்டவிரோத தங்கும் விடுதிகளையும் உடனடியாக மூடக் கோரியும், சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளுக்குக் கடுமையான மரண தண்டனை பெற்றுத் தர வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory