» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் சிஜேபி போராட்டம் தீவிரம்: தர்மேந்திர பிரதானுடன் அமித் ஷா அவசர ஆலோசனை!

திங்கள் 20, ஜூலை 2026 5:10:43 PM (IST)

cjProtest.jpg

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்திக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் தர்மேந்திர பிரதானை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உட்படப் பல்வேறு தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும், தேர்வு முறையில் முறையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் ஆகிய முதன்மைக் கோரிக்கைகளை வலியுறுத்திக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி:

இப்போராட்டத்தில் கலந்து கொண்டு 20 நாட்களுக்கும் மேலாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேரணியில் தடியடி - இணைய சேவை துண்டிப்பு:

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கும் முதல் நாளான இன்று, நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல சிஜேபி அமைப்பினர் முயன்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டனர். இப் பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்த சூழலில், தடையை மீறி முன்னேற முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் அதிரடியாகத் தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசிக் கூட்டத்தைக் கலைத்தனர். இக் கடுமையான மோதலில் இரு தரப்பிலும் சிலர் காயமடைந்தனர்.

போராட்டத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவுவாயில்கள் இரும்புத் தடுப்புகளால் மூடப்பட்டன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஜந்தர் மந்தர், நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்டப் பகுதிகளில் தற்காலிகமாக இணைய சேவையும் (Internet) துண்டிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு:

இத்தகைய பதற்றமான சூழலுக்கு மத்தியில் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளில், வினாத்தாள் கசிவு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் கடுமையான அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கங்களால் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

அமித் ஷா அவசரச் சந்திப்பு:

நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் அலுவலகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்றார். அங்கு தர்மேந்திர பிரதானைச் சந்தித்து அவர் அவசர ஆலோசனை நடத்தினார். இக்கட்டான இச் சூழலில் நடைபெற்ற இந்த உயர்மட்டச் சந்திப்பின் போது என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory