» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஏமன் விமான நிலையம் மீது அமெரிக்கா இங்கிலாந்து வான்வழி தாக்குதல்

சனி 27, ஜூலை 2024 4:37:03 PM (IST)



ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இன்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இதில். ஹமாஸ் பிடியில் இருந்த பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் 100க்கும் மேற்பட்டோர் காசாவில் ஹமாஸ் பிடியில் பணய கைதிகளாக உள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இன்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஏமனின் ஹூடைடா நகரில் உள்ள விமான நிலையம் மீது இந்த வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல், ஏமனின் கமரன் தீவு மீதும் அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. முன்னதாக, இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 21ம் தேதி ஏமனின் ஹூடைடா துறைமுகம் மீது இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்தது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory