» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் 3-வது முறையாக டிக் டாக் செயலி இயக்க அவகாசம் நீட்டிப்பு: டிரம்ப் உத்தரவு!

வெள்ளி 20, ஜூன் 2025 11:23:50 AM (IST)



அமெரிக்காவில் 3-வது முறையாக 'டிக் டாக்' செயலி தொடர்ந்து இயங்குவதற்கான அவகாசத்தை நீட்டித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி, சீனாவின் 'பைட் டான்ஸ்'(Byte Dance) நிறுவனத்திற்கு சொந்தமான 'டிக்டாக்' செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை இயற்றினார். அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால், ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 'டிக்டாக்' செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த சட்டத்திற்கு தடை கோரி 'பைட் டான்ஸ்' நிறுவனம் வாஷிங்டன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 'பைட் டான்ஸ்' நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், 'டிக்டாக்' செயலி மீதான தடை சட்டத்தால் அமெரிக்க மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே 'டிக்டாக்' செயலி அமெரிக்காவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்று கடந்த ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் 'டிக்டாக்' செயலி தொடர்ந்து இயங்குவதற்கான அவகாசத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். 'டிக்டாக்' செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் வெள்ளை மாளிகை தெரிவித்தது. தொடர்ந்து ஏப்ரல் மாதம் 'டிக்டாக்' செயலிக்கான அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

இதனால் அமெரிக்க மக்கள் அந்த செயலியை தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது 3-வது முறையாக 'டிக் டாக்' செயலி தொடர்ந்து இயங்குவதற்கான அவகாசத்தை நீட்டித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் இந்த அவகாசம் தொடர்பான தெளிவான சட்ட வரையறைகள் எதுவும் விளக்கமாக தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக அமெரிக்காவில் 'டிக்டாக்' செயலி தொடர்ந்து இயங்குவது குறித்த தனது விருப்பத்தை டிரம்ப் வெளிப்படுத்தியிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தனது பிரசாரம் அதிக வாக்காளர்களை சென்று சேர்வதற்கு 'டிக்டாக்' செயலி உதவியாக இருந்தது என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory