» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மோடி அழைப்பை ஏற்று அடுத்த வருடம் இந்தியாவிற்கு செல்லவேன் : டிரம்ப் முடிவு

வெள்ளி 7, நவம்பர் 2025 12:02:19 PM (IST)



ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதை எனது நண்பர் மோடி நிறுத்திவிட்டார். அவரது அழைப்பை ஏற்றும் அடுத்த வருடம் இந்தியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரை இந்தியா மறைமுகமாக ஆதரித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பின்னர் ரஷிய நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணமாக காட்டி, இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.

இதனால் இந்தியா-அமெரிக்கா இடையிலான பொருளாதார உறவுகளில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவானது. அதே சமயம், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை படிப்படியாக நிறுத்துவோம் என பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை மோடி நிறுத்திவிட்டார் என்று டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். இது தொடர்பாக ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது; "இந்தியா உடனான நமது பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டார் என்பது நல்ல விஷயம். அவர் எனது நண்பர், சிறந்த மனிதர். என்னை அவர் இந்தியாவிற்கு வருமாறு அழைத்தார். நான் அடுத்த வருடம் இந்தியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்.

நான் முடிவுக்குக் கொண்டு வந்த எட்டு போர்களில், ஐந்து அல்லது ஆறு போர்கள் வரி விதிப்புகளால் முடிவுக்கு வந்தன. உதாரணமாக இரண்டு அணு ஆயுத நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். எட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

அவர்களிடம், ‘நீங்கள் சண்டையை நிறுத்தாவிட்டால், நான் உங்கள் மீது வரி விதிப்பேன்' என்று சொன்னேன். 24 மணி நேரத்திற்குள் நான் போரை முடித்து வைத்தேன். வரிவிதிப்பு இல்லையென்றால், அந்த போரை என்னால் நிறுத்தியிருக்க முடியாது. வரிகள் ஒரு சிறந்த தேசிய பாதுகாப்பு முறை.” இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory