» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு எந்தவிதத் தடையும் இல்லை: நேபாள அரசு விளக்கம்!
வெள்ளி 12, ஜூன் 2026 10:52:52 AM (IST)
இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை என்று நேபாள அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்திய மாம்பழங்களில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி பயன்பாடு இருப்பதாலும், எல்லைப் பகுதிகளில் போதிய சோதனை வசதிகள் இல்லாததாலும் அவற்றின் இறக்குமதிக்கு நேபாள அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாகிப் பரப்பரப்பைக் கிளப்பின.
குறிப்பாக, பூச்சிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்திய மாம்பழங்களை ஏற்றி வந்த லாரிகள் சில நாட்களுக்கு முன்பு மாதேஷ் மாகாண எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டன. எனினும், இந்திய அதிகாரிகளிடமிருந்து முறையான தாவர ஆரோக்கிய சான்றிதழ் (Phytosanitary Certificate) பெறப்பட்டதைத் தொடர்ந்து, அந்த லாரிகள் தற்போது நேபாளத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, இந்திய மாம்பழ இறக்குமதியை நிறுத்தினால் உள்நாட்டுச் சந்தையில் கடுமையான பற்றாக்குறை ஏற்படும் என்று ஜனக்பூர்தாமில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் புவனேஸ்வர் பூர்பே எச்சரித்திருந்தார். ஜனக்பூர்தாமுக்கு நாளொன்றுக்கு 50 டன்னுக்கும் அதிகமான மாம்பழங்கள் தேவைப்படும் நிலையில், நாட்டின் ஒட்டுமொத்தத் தேவையைப் பூர்த்தி செய்ய உள்ளூர் உற்பத்தி மட்டுமே போதாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேபாள வேளாண்மை, வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்ய எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. சில விதிமுறைகளின்படி, சந்தைத் தேவையின் அடிப்படையில் இந்திய மாம்பழங்கள் நேபாளத்திற்குள் நுழைவதற்கான அனுமதி தடையின்றி வழங்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், பூச்சிகளால் பாதிக்கப்பட்ட வேளாண் விளைபொருட்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க, உயிரியல் பாதுகாப்புச் சட்டத்தின் (Biosecurity Regulation) கீழ் உரிய சுத்திகரிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இந்திய மாம்பழங்கள் 48°C வெந்நீரில் ஒரு மணி நேரம் வைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பின்னரே சந்தைக்குள் அனுமதிக்கப்படுவதாக நேபாள அமைச்சகம் விளக்கியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெர்மனி ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவில் திருவிழா: அதிபர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெயின்மியர் பங்கேற்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:21:10 PM (IST)

சீனாவை சூறையாடிய 'நவுல்' புயல்: 350 விமானங்கள் ரத்து - 7¼ லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!
திங்கள் 27, ஜூலை 2026 8:24:00 AM (IST)

ஃபீல்ட்ஸ் மெடல்: 100 ஆண்டுகால புதிருக்கு விடை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள் சாதனை!
ஞாயிறு 26, ஜூலை 2026 9:02:09 PM (IST)

அதிகளவு போதையால் சவுதி இளவரசர் மரணம்: பிரிட்டன் நீதிமன்ற விசாரணையில் உறுதி
வெள்ளி 24, ஜூலை 2026 4:15:17 PM (IST)

கப்பல்களைத் தாக்கினால் ஈரானின் மின் நிலையங்கள் அழிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
வியாழன் 23, ஜூலை 2026 11:36:09 AM (IST)

ஹவுதி அமைப்பினர் எச்சரிக்கை: இந்தியா, சீனா வந்த 3 கச்சா எண்ணெய் கப்பல்கள் திசைமாற்றம்!
புதன் 22, ஜூலை 2026 4:22:18 PM (IST)


