» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் மீன்கள் விலை கடும் உயர்வு : வரத்து குறைந்ததால் மீனவர்கள் கவலை!!

ஞாயிறு 3, மார்ச் 2024 9:06:34 AM (IST)

வரத்து குறைவு காரணமாக தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகு மீனவர்கள் ஆழ் கடலுக்கு சென்று தங்கி மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் சனிக்கிழமைகளில் திரும்பி வருவது வழக்கம். கடந்த 27-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்லும் பெரும்பாலான மீனவர்கள் கடந்த 29-ந் தேதி அன்று ஆழ்கடலுக்கு மின்பிடிக்க சென்றனர். இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகளில் நேற்று குறைந்த அளவு படகுகளே கரைக்கு திரும்பின. ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று 2 நாட்களில் திரும்பியதால் அவர்களின் படகுகளில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க நேற்று பொதுமக்கள் கூட்டமும், வியாபாரிகள் கூட்டமும் அலைமோதியது. தேவை அதிகமாக இருக்கும் நிலையில் மீன்களின் வரத்து குறைவாக இருந்ததால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

வழக்கமாக ஒரு கிலோ ரூ.700-க்கு விற்ற சீலா மீன் நேற்று ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் முதல் ரூ.1,200 வரை விற்பனையானது. விளைமீன் கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரையும் ஊழி மீன் கிலோ ரூ.600 வரையும், பாறை மீன் கிலோ ரூ.500 வரையும், நண்டு கிலோ ரூ.700 வரையும், வங்கனை மீன் கிலோ ரூ.200 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ.3 ஆயிரத்து 500 வரைக்கும், கீரிமீன் சாளை கூடை ரூ.2 ஆயிரம் வரையும் விற்பனையானது.

ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் நேற்று சீலா மீன் கிலோ ரூ.1,500 வரையும், விளைமீன் ரூ.800 வரையும், ஊளி மீன் ரூ.700 வரையும், சாளை மீன் கிலோ ரூ.200 வரையும் விற்பனையானது. வழக்கமாக கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் போது அசைவ உணவுகளை தவிர்ப்பதால் இந்த காலங்களில் மீன்களின் விலை குறைந்து காணப்படும். ஆனால் தற்போது மீன்களின் வரத்து குறைவாக காணப்படுவதால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. மீன்களுக்கு நல்ல விலை இருந்தும் மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் பெரிதும் கவலை அடைந்தனர்.


மக்கள் கருத்து

என்ன ?Mar 3, 2024 - 03:05:23 PM | Posted IP 162.1*****

அது என்ன கவலை? துட்டுக்காக கார்பொரேட் கம்பெனிகளுக்கு ஏற்றுமதி செய்து இயற்கை கடல் வளங்களை எல்லாத்தையும் ஆட்டைய போட்டால் மீன் இனங்கள் குறைய தான் செய்யும். ஆனால் கடல் வளங்களை பாதுகாக்கத் தெரியாது. சொந்தமா மீன் பண்ணைகளை அமைத்து தொழில் தொடங்குங்கள். அப்போது தான் தொழில் அருமை தெரியும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory