» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பெண்ணுக்கு பாலியல் தொல்லை; மேலும் ஒரு போலீஸ்காரர் கைது
ஞாயிறு 2, பிப்ரவரி 2025 10:07:18 AM (IST)
புளியங்குடியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒரு போலீஸ்காரர் கைது ெசய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சைலேஷ் (42). போலீஸ்காரரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். அப்போது இவரும், அதே காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றிய சிவகிரி அருகே ஆத்துவழி கிராமத்தை சேர்ந்த செந்தில் (44) என்பவரும் சேர்ந்து ஒரு இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாவட்ட எஸ்பி அரவிந்த் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் போக்சோ, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி அறிந்த சைலேஷ், செந்தில் ஆகியோர் தலைமறைவாகினர். இதையடுத்து புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன் மேற்பார்வையில், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைைமயில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் 2 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். நாகர்கோவிலில் பதுங்கி இருந்த சைலேஷை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக செந்திலை தீவிரமாக தேடி வந்தனர். செந்திலின் செல்போன் சிக்னல் மூலம் அவர் ஓசூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சொக்கம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உடையார்சாமி, போலீஸ்காரர்கள் விஜயபாண்டி, சுரேஷ், மாரியப்பன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஓசூருக்கு விரைந்து சென்றனர். அங்கு பதுங்கி இருந்த போலீஸ்காரர் செந்திலை கைது செய்து, நெல்லைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.