» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வங்கிகளில் பண நடமாட்டத்தைக் கண்காணிக்க 20 முகமைகள் தீவிரம்: ஆட்சியர் தகவல்!

புதன் 18, மார்ச் 2026 10:48:07 AM (IST)



வங்கிகளில் பண நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் 20-க்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு முகமைகள் ஈடுபடுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் இளம்பகவத் தெரிவித்தார். 

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கியாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான  க. இளம்பகவத் தலைமை தாங்கினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் கடந்த மார்ச் 15, 2026 அன்று தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் காலத்தில் முறையற்ற பண நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்த முக்கிய அம்சங்கள்: வருமான வரித்துறை, காவல்துறை, சி.ஜி.எஸ்.டி (CGST), மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு முகமைகள் பணப் பரிமாற்றங்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வங்கிகள் தங்களது தினசரி பணப்பரிமாற்றங்கள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்குப் பணம் கொண்டு செல்லும் வாகனங்கள் குறித்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும். வழக்கத்திற்கு மாறான மற்றும் அதிகப்படியான பணப்பரிமாற்றங்கள் குறித்து உடனடியாகத் தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  மூ. குருச்சந்திரன், மாவட்ட வன அலுவலர்  இளையராஜா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  ஆறுமுகம், உதவி ஆட்சியர் (பயிற்சி)  புவனேஷ்ராம், மற்றும் பல்வேறு வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory