» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தவெக-வுடன் கூட்டணி பேசவில்லை; ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது: நயினார் நாகேந்திரன் பேட்டி!

வியாழன் 19, மார்ச் 2026 4:23:10 PM (IST)

தவெக-வுடன் கூட்டணி பேசவில்லை; ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தமிழக வெற்றிக் கழகத்துடன் பாஜக கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்துவதாக வரும் செய்திகளை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

"விஜய் கட்சியிலிருந்து எங்களுடன் யாரும் கூட்டணிக்காகப் பேசவில்லை; நாங்களும் அவர்களிடம் பேசவில்லை. 'பிம்பம், கம்பம்' என்பதெல்லாம் தேவையற்ற பேச்சுக்கள். மேலும், 80 தொகுதிகள், துணை முதல்வர் பதவி என ஆஃபர் தருவதாகக் கூறப்படும் ஆதவ் அர்ஜுனா என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது."

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஓரிரு நாட்களில் தமிழகம் வரவுள்ளதாகவும், அவர் வரும்போது முறையான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பிரதமர் மோடி விரைவில் கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூருக்கு வரவுள்ளார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அமலாக்கத் துறை (ED) மற்றும் வருமான வரித் துறை (IT) ஆகியவற்றை வைத்து யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை என்று அவர் கூறினார்.

இவை அனைத்தும் சுதந்திரமான அமைப்புகள். தவறு செய்தவர்கள் மீது மட்டுமே விசாரணை நடக்கும். விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே அவர் மீது வருமான வரித் துறை தொடர்பான வழக்குகள் உள்ளன. கடந்த தேர்தலுக்கு முன்பே வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் மீதுதான் இப்போது விசாரணை நடக்கிறது."

"திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன. வரும் தேர்தலில் மக்களும் அவர்கள் இடங்களைக் குறைப்பார்கள். பாஜக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. ஆனால், 'இந்துக்கள் வாக்குகள் வேண்டாம்' என்று கூறும் திமுகதான் மதவாதக் கட்சி. பாஜக அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கியே செயல்படுகிறது" என்று அவர் சாடினார்.

செய்தியாளர் சந்திப்பின் இறுதியில், அனைவருக்கும் தனது 'யுகாதி' திருநாள் வாழ்த்துகளைத் தெலுங்கு மொழியில் கூறி நயினார் நாகேந்திரன் விடைபெற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory