» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போலீசாரைத் தாக்க முயன்றதாக வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு: எஸ்.ஐ., மண்டை உடைந்தது!

புதன் 8, ஏப்ரல் 2026 8:38:27 AM (IST)



ஆலங்குளம் அருகே கள் விற்பனை புகாரில் விசாரணை நடத்தச் சென்றபோது ஏற்பட்ட மோதலில், பனையேறும் தொழிலாளியைச் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டார். இதில் காலில் குண்டு பாய்ந்த வாலிபரும், தலையில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் மருதம்புத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32), விவசாயி மற்றும் பனையேறும் தொழிலாளி. இப்பகுதியில் கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த புகாரின் பேரில், ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா மற்றும் போலீசார் நேற்று மருதம்புத்தூர் காட்டுப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மணிகண்டனைப் பனை மரத்தில் ஏறி அங்கிருந்த பானையை எடுக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். அப்போது போலீசாருக்கும் மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இது கைகலப்பாக மாறியது.

இந்தத் தள்ளுமுள்ளுவின் போது, அங்கிருந்த மரக்கட்டை ஒன்று சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜாவின் தலையில் பலமாக விழுந்ததில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் ஆத்திரமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா, தான் வைத்திருந்த துப்பாக்கியால் மணிகண்டனை நோக்கி 4 முறை சுட்டுள்ளார். இதில் 2 குண்டுகள் மணிகண்டனின் கால்களில் பாய்ந்தன.

படுகாயமடைந்த மணிகண்டன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா ஆகிய இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விவசாயி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தகவல் பரவியதும், மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆலங்குளம் - முக்கூடல் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். அகில இந்திய காமராஜர் ஆதித்தனார் கழக பொதுச்செயலாளர் சிங் நாடார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

சம்பந்தமே இல்லாமல் சாதாரண விவசாயி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், இந்தச் சம்பவத்தால் மருதம்புத்தூர் மற்றும் ஆலங்குளம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory