» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கள்ளச்சாராயம் கடத்தலை தடுப்பதில் தமிழக காவல்துறை தோல்வி: ராமதாஸ்

புதன் 10, ஜூலை 2024 5:44:25 PM (IST)

தமிழ்நாட்டிற்கு கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதை தடுப்பதில்  காவல்துறை தோல்வி அடைந்து விட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "புதுவை மாநிலம் மதகடிப்பட்டு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி வந்து குடித்த விக்கிரவாண்டி தொகுதி மதுராபூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

மதுராபூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், பிரபு ஆகிய இரு தொழிலாளர்கள் புதுவை மாநிலம் மதகடிப்பட்டு கிராமத்திற்குச் சென்று கள்ளச்சாராயத்தை வாங்கி வந்து தங்கள் ஊரைச் சேர்ந்த ராஜா, சுரேஷ் பாபு, பிரகாஷ், காளிங்கராஜ் உள்ளிட்டோருடன் சேர்ந்து குடித்துள்ளனர். அடுத்த சில மணி நேரங்களில் 7 பேருக்கும் கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 2 நாள் தீவிர மருத்துவத்திற்குப் பிறகு 5 பேர் வீடு திரும்பிவிட்ட நிலையில், மீதமுள்ள இருவர் கல்லீரல் பாதி்ப்புக்காக தொடர்ந்து மருத்துவம் பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதையும், கடத்தி வரப்படுவதையும் தடுக்க தமிழக காவல்துறை தவறிவிட்டது என்பதைபே இந்த நிகழ்வு காட்டுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் புதுவையில் இருந்து வாங்கிவரப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தமிழக காவல்துறை விழித்துக் கொண்டு எல்லைப் பகுதியில் சோதனையை வலுப்படுத்தி இருந்தால், மதுராபூரிகுடிசை கள்ளச்சாராய பாதிப்புகளை தடுத்திருக்க முடியும்.

ஆனால், புதுவையில் இருந்து கொண்டுவரப்படும் கள்ளச்சாராயத்தைத் தடுக்க தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயக் கடத்தலை தடுப்பதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டன. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு மது மற்றும் கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory