» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பைக் மீது லாரி மோதல்: வாலிபர் பரிதாப சாவு!
புதன் 17, ஜூலை 2024 8:49:02 AM (IST)
நாலாட்டின்புத்தூர் அருகே பைக் மீது டிப்பர் லாரிமோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். டிப்பர் லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள சத்திரபட்டி காலனி தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் தினேஷ்குமார் (19). கல்லூரி படிப்பை முடித்த இவர் நேற்று சத்திரபட்டியில் இருந்து இடைசெவலுக்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இடைசெவல் விலக்கு அருகே நெல்லை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றபோது, எதிரே கோவில்பட்டியை நோக்கி வேகமாக வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது.
இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த தினேஷ்குமார் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நாலாட்டின்புத்தூர் சப்- இன்ஸ்பெக்டர் அருள்சாம்ராஜ் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் மேல தெரு பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் மனோகரன் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.