» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோவிலில் பவுர்ணமி வழிபாடு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
ஞாயிறு 21, ஜூலை 2024 9:05:45 AM (IST)
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பவுர்ணமி விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இரவு முழுவதும் விடிய விடிய வழிபாடு நடத்தினர்.
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயில் உள்ளது. பவுர்ணமி தோறும் கொங்கு மண்டல பகுதியை சேர்ந்த பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி நேற்று ஆடி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் தங்கியிருந்து சமுத்திரத்துக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டனர்.
மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் இரவு முழுவதும் தங்கியிருந்து பவுர்ணமியை முன்னிட்டு வழிபாடு நடத்தினர். இதனால் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கடற்கரை, கோயில் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் மிகுதியாக காணப்பட்டது. பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்ததால் ஏராளமான வாகனங்கள் திருச்செந்தூரில் குவிந்தன.