» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலி மருத்துவர்களால் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

வியாழன் 15, மே 2025 11:38:50 AM (IST)

போலி மருத்துவர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் கல்வியறிவு அதிகம் பெற்ற மருத்துவ வசதிகள் நிறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் உள்ளன.

இத்தனை மருத்துவ வசதிகள் இருந்தபோதிலும், சிலர் உரிய மருத்துவப் பயிற்சி இல்லாத நிலையிலும், 'நாட்டு வைத்தியம்' என்ற பெயரில் போலி மருத்துவச் சேவைகளை தங்கள் வீடுகளிலேயே வழங்கி வருகின்றனர். சில பெற்றோர், அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அனைத்து வசதிகளும் இருப்பதையும், திறமையான மருத்துவர்கள் பணியாற்றுவதை குறித்து அறிந்திருந்தும் தவறான வழிகாட்டுதல் மற்றும் மூடநம்பிக்கையால் தங்கள் குழந்தைகளை இந்த போலி மருத்துவர்களிடம் குறிப்பாக காய்ச்சல், காய்ச்சல் காரணமாக ஏற்படும் சிறு கொப்பளங்களுக்காக அழைத்து செல்கின்றனர். அங்கு வழங்கப்படும் தவறான சிகிச்சையால் நிறைய குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வழங்கப்படும் தரமற்ற சிகிச்சைகளால் குழந்தைகளின் உயிருக்கு நேரடி ஆபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த நிலைகளை தடுக்கும் நோக்கில், சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் கிராம சுகாதார செவிலியர்கள், பிரசவத்துக்கு பின் தாயும் சேயும் வீட்டிற்கு திரும்பிய பின்னர் 1, 3, 7, 14, 21, 42 ஆம் நாட்களில் நேரில் சென்று தாய் சேய் நல பராமரிப்பை அளிக்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சுகாதாரத்துறையின் கீழ் பதிவாக சிகிச்சையளிக்க வரும் மருத்துவர் அடங்கிய RBSK குழுவினரிடம் கொண்டு செல்லலாம்.

குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சையை வழங்குவார்கள். மேலும் மேல் சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கான ஏற்பாடுகளையும் அரசு மருத்துவமனைகளில் செய்து தருவார்கள். ஏனவே பெற்றோர்கள் தங்கள்குழந்தையின் உடல் நலத்தில் ஏற்படும் சந்தேகங்களை தடுப்பூசி வழங்க வரும் செவிலியரிடமோ, அங்கன்வாடி மைய ஆசிரியர்களிடமோ தேவைப்படும் போதெல்லாம் கேட்டு தெளிவு பெறலாம்.

எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், தங்களது பகுதியில் உள்ள கிராம சுகாதார செவிலியரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று, பயிற்சி பெற்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.மேலும், மாவட்டத்தில் எங்கும் போலி மருத்துவர்கள் முறையற்ற சிகிச்சை அளிக்கும் சம்பவங்கள் தெரியவந்தால், அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்கள்.

இது போன்ற பக்க விளைவுகளில் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்கலாம்? 

பல சந்தர்ப்பங்களில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மருந்து தருவதிலான கவனக்குறைவுதான் முக்கியமான காரணமாக இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து கொடுத்தல், ஏற்கனவே காய்ச்சல் அல்லது தொற்று காரணமாக தங்கள் வசம் வைத்துள்ள பழைய மருந்துகளை மீண்டும் பயன்படுத்துதல் போன்றவை பெரும் அபாயத்திற்கு வழிவகுக்கின்றன. இதில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

மருந்துகளை எப்போது, எவ்வளவு அளவில் வழங்க வேண்டும் என்பதை அரசு அல்லது தனியார் குழந்தைகள் நல மருத்துவரிடம் தெளிவாகக் கேட்டு பயன் படுத்த வேண்டும். சிறு பக்கவிளைவுகள் ஏற்பட்டாலும் தாமதிக்காமல் குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும். குழந்தையின் உடல்நிலை மாறுதல்களில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் பெற்றோர் கவனக்குறைவாக இருக்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். 

குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனைகள் இல்லாமல் புதியதாக எந்த மருந்துகளையும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. முதற்கட்ட அறிகுறிகள் தெரிந்தவுடனே குழந்தைகள் நல மருத்துவரிடம் மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும். ஆகையால், விலைமதிக்க முடியாத குழந்தைச் செல்வங்களின் உடல்நலத்தைக் காக்கும் பொருட்டு, தகுதியில்லாத போலி மருத்துவர்களிடம் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார். 


மக்கள் கருத்து

கள்ளகுறிச்சிமே 15, 2025 - 06:11:26 PM | Posted IP 104.2*****

மாவட்டத்தில் ஸ்கேன் எடுத்து பெண் குழந்தைகளை கொல்கின்றனர். அதை பிடிப்பதில் தீவிரம் காட்டுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory