» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகப்பேறு மருத்துவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா பங்கேற்பு

வெள்ளி 27, ஜூன் 2025 12:36:02 PM (IST)



குமரி மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் மகப்பேறு மருத்துவர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் மாவட்ட ஆட்சியர், ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து அரசு மற்றும் தனியார் மகப்பேறு மருத்துவர்களுக்கான அதிக ஆபத்துடைய கர்ப்பிணி பெண்களுக்கு வழங்க வேண்டிய சிகிச்சை வழிமுறைகள் அதற்கான தேசியநல குழுமத்தின் நெறிமுறைகள் விளக்குவதற்கான பயிலரங்கம் (sensitization workshop on National Health Mission Protocol in the management of High Risk Pregnant Mothers) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மகப்பேறு இறப்புகள் இல்லாத மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை மாற்றும் நோக்கத்தில், மாவட்ட நிர்வாகம் பலதரப்பட்ட செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த பயிலரங்கம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளர்களாக மகப்பேறு மருத்துவர்கள் ரத்னகுமார், நிபுண ஆலோசகர் தேசியநல குழுமம், சென்னை மற்றும் சுமதி, இயக்குனர், IOG KGH (KASTHURIBA GANDHI HOSPITAL, CHENNAI ), சுந்தரநாராயணன், தலைவர், NAGERCOIL OBSTETRICS AND GYNAECOLOGICAL SOCIETY ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் பிரபாகரன், முதல்வர் கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ராமலக்ஷ்மி, இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சகாய ஸ்டீபன் ராஜ், துணை இயக்குனர் குடும்ப நலம் ரவிக்குமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியின் தொடக்கமாக, மாவட்ட சுகாதார அலுவலர் பயிலரங்கத்தின் நோக்கம் மற்றும் முக்கியத்துவத்தை விளக்கினார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பிரசவங்கள் மற்றும் மகப்பேறு மரணங்களைப் பற்றிய நிலைமை குறித்து விரிவாக விளக்கினார். 2024-2025 ம் ஆண்டிற்கான கன்னியாகுமரி மாவட்ட மகப்பேறு இறப்பு விகிதம் 32 எனவும், மேலும், மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள பிற சில மாவட்டங்களில் கூட மகப்பேறு இறப்பு விகிதம் இதைவிட குறைவாக இருப்பதாகவும் மாவட்ட சுகாதார அலுவலர் குறிப்பிட்டார். எனவே, நமது மாவட்டத்தை மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கில், ஒவ்வொருவரும் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார். 2025-2026 ம் ஆண்டில் இதுவரை எந்த மகப்பேறு இறப்பும் பதிவாகவில்லை என்றும் கூறினார். 

இது தொடர அனைவரும் ஒருமித்துப் பணியாற்ற வேண்டும் என்றும் மாவட்ட சுகாதார அலுவலர் வலியுறித்தினார்கள். தொடர்ந்து, ரத்னகுமார் பயிலரங்கத்தின் முக்கிய நோக்கங்களைக் குறிப்பிட்டுத் தெரிவித்தார். குறிப்பாக, அதிக ஆபத்துடைய கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கவேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து, தேசிய நலக்குழுமத்தின் நெறிமுறைகளை விரிவாக விளக்கினார். அவர் மேலும், பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் அதிக உதிரப்போக்கை (PPH) முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் வழிமுறைகள், பிரசவகால உயர் இரத்த அழுத்தத்தை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான சிகிச்சை நடைமுறைகள், மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் விகிதத்தை வைத்து இதனை முன்கூட்டியே கண்டறியலாம். 

மருத்துவர்கள் நோயாளிகளுடன் உரையாடும் போது கனிவுடன் அணுகுவது மிக முக்கியம். நோயின் தன்மை மற்றும் சிகிச்சை குறித்த தகவல்களை விளக்கமாகவும் நோயாளிகள் புரிந்து கொள்ளும் வகையில் பேச வேண்டும்.மேலும், மருத்துவமனைகளில் ஒப்புதல் படிவங்களில் (Consent Form) நோயாளிகளிடமும், அவர்களது குடும்பத்தினரிடமும் கையெழுத்து பெறும் போது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். 

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிரசவம் நடைபெறும் நேரங்களில் தாய் மற்றும் குழந்தையின் நலனைக் கண்காணிக்கவும், தேவையான தருணத்தில் முறையான மேற்சிகிச்சையை வழங்க பரிந்துரை செய்யவும், Partograph எனப்படும் வரைபடம் கட்டாயமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். பிரசவ அறையின் சுத்திகரிப்பு நடைமுறைகள் மற்றும் கிருமிநாசினி பயன்பாடு, HELLP syndrome-இன் காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு இரத்தசோகை இருந்தால் அவசியமாக Peripheral smear பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற அவசியம், 

கர்ப்பிணி தாய்மார்களுக்கு இரத்தம் அல்லது இரத்தம் சார்ந்த பிளாஸ்மா, தட்டணுக்கள் (Platelets), மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் (RBCs) செலுத்தும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பான நடைமுறைகள் PT/INR போன்ற முக்கியமான இரத்தப் பரிசோதனைகள், தாய் மற்றும் சேய் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில், அனைத்து 24x7 மணிநேரமும் தாய் சேய் நலனுக்காக செயல்படும் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக நடைபெற வேண்டும். இவ்வகை பரிசோதனைகளுக்கான இரத்த மாதிரிகள் வெளி ஆய்வகங்களுக்கு அனுப்பப்படக் கூடாது.

மேலும், பொது மக்களின் நலனுக்காக அரசால் ஒதுக்கப்படும் நிதிகள், தாமதமின்றி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். இரத்தம் தேவைப்படும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு முன்கூட்டியே இரத்தம் வங்கிககில் ஏற்பாடு செய்து வைக்கப்படவேண்டும். கர்ப்பிணித்தாய்மாருக்கு பிரசவத்தின்போது இரத்தம் தேவைப்படும் சாத்தியம் உள்ள நிலையில், அவற்றை முன்கூட்டியே அவர்களின் ரத்த வகைக்கு ஏற்ப இரத்த வங்கியில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். Primary LSCS எனப்படும் முதல் குழந்தையை சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் பெற்றுக்கொள்வது, மருத்துவத் தேவையுள்ள சந்தர்ப்பங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். என பல்வேறு முக்கிய அம்சங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

மாவட்ட ஆட்சியர் உரையாற்றும் போது, கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கிடையே இரத்த சோகை மற்றும் கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் எடை அதிகரிப்பு போன்ற சிக்கல்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அதேபோல், செயற்கை கருத்தரித்தல் வசதியுள்ள மருத்துவமனைகள், தங்களிடம் சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவம் நடத்துவதற்கான முழுமையான வசதிகள் இல்லாத நிலையில், அவர்களை முன்கூட்டியே மூன்றாம் நிலை மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்கள்.

மேலும், எடை குறைவாக (Low Birth Weight) பிறக்கும் குழந்தைகள் தக்க முறையில் சிகிச்சை மற்றும் தீவிர கவனிப்புடன் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அதிகமான எடை குறைந்த குழந்தைகள் பிறப்பதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, குறைபிரசவம் (Preterm Delivery) ஆகும் என்றும்,தேவையான சூழ்நிலைகளில் மட்டுமே குறிப்பிட்ட பிரசவ தேதிக்கு முன் பிரசவம் செய்யப்பட வேண்டும்.இயற்கையான முறையில் கருப்பை காலம் முழுமையாக நிறைவடைந்து பிறக்கும் குழந்தைகள் உடல்நலமும், வளர்ச்சியும் சிறப்பாக அமையும் என்பதைக் கருத்தில் கொண்டு, குறைப்பிரசவங்களை தவிர்த்து, தேவையான இடங்களில் மருத்துவ தேவை ஏற்படும்போது பிரசவம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு இரத்த சோகை அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், அவற்றைத் தெளிவாக விளக்கி சிகிச்சை குறித்த தகவல்களை மகப்பேறு மருத்துவர்கள் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு காணப்படும் இரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, அவர்களது வளரிளம் பருவத்திலேயே ஏற்படும் நீடித்த ஊட்டச்சத்து குறைபாடுகளே ஆகும்.இதனை RKSK (Rashtriya Kishor Swasthya Karyakram) மற்றும் RBSK (Rashtriya Bal Swasthya Karyakram) போன்ற அரசின் முக்கிய திட்டங்களின் மூலம், இரும்புசத்து மாத்திரைகள், புரதச்சத்து மற்றும் மைக்ரோந்யூட்ரியன்கள் தேவையான அளவில் வழங்கப்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். 

சுந்தரநாராயணன் செயற்கைக் கருத்தரித்தல் முறைகள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும், அதற்கான கவனிப்பு முறைகள் குறித்தும் செயற்கைக் கருத்தரித்தல் முறைகள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கான உடல் எடை பராமரிப்பு குறித்தும் விளக்கிக்கூறினார்கள். 

சுமதி பேசும்போது 35 வருட பணி அனுபவத்தில் கண்ட சிக்கலான கர்ப்பிணித்தாய்மார்களை குறித்தும் அப்போது கையாண்ட வழிமுறைகள் குறித்தும் அவர்களது அனுபவங்களை விளக்கி க்கூறினார்கள். பின்னர் நிகழ்வில் கலந்துக்கொண்ட மகப்பேறு மருத்துவர்கள் சந்தேகங்களைக் குறித்து நிபுணர்களிடம் கலந்தாலோசித்து நிவர்த்தி செய்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியின் நிறைவில், கலந்துகொண்ட மருத்துவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மகப்பேறு மரணங்கள் இடம்பெறாத வகையில் முறைமையான நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்பான பிரசவத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory