» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)
விரிகோடு ரயில்வே கேட் வழியாகதான் மேம்பாலம் அமைக்கப்படும் என கருத்து கேட்பு கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தார்.
மார்த்தாண்டம் கருங்கல் சாலையில் விரிகோட்டில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட், ரயில்கள் செல்லும் போதெல்லாம் மூடப்படுகிறது. இவ்வாறு அடிக்கடி மூடப்படுவதால் போக்குவரத்து தடைபட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
எனவே விரிகோடு ரயில்வே கேட் பகுதி வழியாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று 6 கிராம மக்கள் சுமார் 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள். ஆனால் நெடுஞ்சாலை துறையினர் மாற்றுப்பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்தநிலையில் பொதுமக்களுக்கு ஆதரவாக விஜய் வசந்த் எம்.பி.யும், தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ.வும் செயல்பட்டு வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் அவர்கள் பொதுமக்களுடன் மாவட்ட கலெக்டர் அழகு மீனாவை நாகர்கோவிலில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது எம்.பி., எம்.எல்.ஏ.வுடனும், நெடுஞ்சாலை துறையினரிடமும் விரிகோடு பகுதி மக்களை சந்தித்து மேம்பாலம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அவர்களது கருத்துக்களை கேட்டு இறுதி முடிவு எடுக்குமாறு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
கருத்து கேட்பு கூட்டம்
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் விரிகோட்டில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பொதுமக்கள் தரப்பை சேர்ந்த ஸ்டேன்லி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் தங்கசாமி ஆசிரியர், பிரசன்னகுமார், உமேஷ், டாக்டர் பினுலால்சிங் ஆகியோர் பேசினர். மேலும் விஜய் வசந்த் எம்.பி., தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ. பத்மநாபபுரம் சப்-கலெக்டர் வினய்குமார் மீனா மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரி மாலிக் முகமது, உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் பமலா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
அவர்கள் பொதுமக்களிடம் மேம்பாலம் சம்பந்தமான கருத்துக்கள் கேட்டறிந்தார்கள். அப்போது பொதுமக்கள் மாற்று பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதை கைவிட வேண்டும் என்றும் மார்த்தாண்டம் கருங்கல் சாலையில் விரிகோடு ரயில்வே கேட் பகுதி வழியாக மட்டுமே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதுதொடர்பாக அதிகாரிகள் விவாதித்து ஆலோசனை நடத்தினர்.
அதன்பிறகு விஜய் வசந்த் எம்.பி.யும், தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ.வும் மாற்றுப்பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதை கைவிடப்படும் என்றும் விரிகோடு ரயில்வே கேட் வழியாகவே மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் இது தொடர்பாக கலெக்டரை சந்தித்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனுமதி மீறி போராட்டம் நடத்துவது அரசியல் கட்சிக்கு அழகல்ல: உயர்நீதிமன்றம் கண்டனம்!
புதன் 9, ஜூலை 2025 5:38:20 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)

சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆசிரியர்கள் தக்க பாடத்தை கற்பிப்பார்கள்: நயினார் நாகேந்திரன்
புதன் 9, ஜூலை 2025 5:07:26 PM (IST)

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து : 13 பேருக்கு ரயில்வே விசாரணை குழு சம்மன்
புதன் 9, ஜூலை 2025 4:19:04 PM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடப் பணிகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
புதன் 9, ஜூலை 2025 4:08:01 PM (IST)

கேரளாவில் பஸ்கள் ஓடவில்லை: கோவையில் இருந்து புறப்பட்ட 50 பஸ்கள் எல்லையில் நிறுத்தம்!
புதன் 9, ஜூலை 2025 11:36:56 AM (IST)
