» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பட்ஜெட்டில் கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

சனி 17, ஜனவரி 2026 10:32:11 AM (IST)

மத்திய பட்ஜெட் வருகின்ற 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமான தமிழ்நாடு, நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது, இது இந்தியாவின் மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 9.6சதமானம் ஆகும். இந்திய அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் 6 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற நியாயமான மொத்த உள்நாட்டு உற்பத்தி அடைய இலக்கு வைத்துள்ளது. அதேபோல், தமிழ்நாடு மாநிலம் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார நிலையை அடைய இலக்கு வைத்துள்ளது. இந்த தொலைநோக்கு பார்வை நனவாகும் என்பதை உறுதி செய்வதற்காக 'ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி' என்ற தலைப்பில் விரிவான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறது. 

தமிழ்நாடு ரயில்வே கட்டமைப்பு, புதிய முனையங்கள், இருவழிபாதை, மூன்று வழி பாதை திட்டங்கள், சரக்கு கிடங்கு திறன், சரக்கு நிலையங்கள் , சரக்கு போக்குவரத்துக்கு என்று தனி பாதை, கூடுதல் தினசரி ரயில்கள்,  ஆகியவற்றில் உள்கட்டமைப்பை முறையாக மேம்படுத்தாமல், 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் திட்டமிடப்பட்ட ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் 10-ல் ஒரு பங்கு கூட அடைவதை  ஒருபோதும் நினைத்துப் பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள பயணிகள் சுமார் 200 கி.மீ க்கு மேல் பயணம் செய்ய வேண்டும் எனில் மிகமிக  குறைந்த அளவில் மாசு ஏற்படுத்தும் ரயில் போக்குவரத்தில் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு கணிசமாக மேம்படுத்த  அவசர கால அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும்.

மத்திய அரசு தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கடுமையாக நடந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற கோஷம் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ள கோசம் ஆகும். மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இந்த கோஷம் சரியாக பொருந்தி வருகிறது. மத்திய அரசு வடமாநிலங்களுக்கு பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கின்ற காரணத்தால் தென்மாநில மக்கள்  மத்திய அரசுக்கு எதிராக இந்த வாக்கியத்தை பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். இதைப்போல் தென்மாவட்ட மக்களுகம் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் எதிராக இந்த கோஷம் சரியாக பொருந்தி வருகிறது என்றால் மிகையாகாது.

பாரத பிரதமர் மோடி அவர்கள்   2014-ம் ஆண்டு பதவியேற்றது முதல் தமிழ்நாட்டுக்கு  புதிய வழித்தடங்களில் இருப்பு பாதை அமைக்கும் திட்டங்கள் இரண்டு திட்டங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் திட்டமாக மொரப்பூரில் இருந்து தர்மபுரிக்கு பழைய பாதையை மீண்டும் கொண்டு வர வேண்டி 36 கி.மீ அகல பாதை அமைக்க 2016-17-ம் ஆண்டு பட்ஜெட்டில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது திட்டமாக  ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 17.2 கி.மீ தூரத்துக்கு புதிதாக இருப்பு பாதை அமைக்க 2019 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் பவளப்பாறைகள் அதிகம் உள்ள இடங்கள் பாதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் காரணங்களால் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கவில்லை. 

தமிழ்நாட்டில் சுமார் 5000 கி.மீ தூரத்துக்கு புதிய இருப்புபாதை அமைக்க பொறியியல் மற்றும் போக்குவரத்து சர்வே செய்யப்பட்டுள்ளது. பாரத பிரதமர் மோடி அவர்கள்  2014 தேர்தலுக்கு முன்பு கடந்த 75 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் அரசு எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் செய்யவில்லை என்று பலமுறை தேர்தல் பிரச்சாரங்களில் பெரிதாக பேசப்பட்டது.   இதனால் மோடி அவர்கள் பிரதமர் ஆனால் இந்த தமிழ்நாடு கிழக்கு கடற்கரை பாதை திட்டத்தை கண்டிப்பாக அறிவித்து செயல்படுத்துவார் என்று மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டது. 

ஆனால் ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது.  இந்த திட்டம் இதுவரை அறிவிக்கப்படாதது தென்மாவட்ட மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறைந்த பட்சம் இந்த திட்டம் ரிசர்வே மறுமதிப்பீட்டுக்கு கூட அறிவிக்கப்படவில்லை.  பிரதமர் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த 2014 அல்லது 2015 -ம் ஆண்டுகளில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு அறிவிக்கப்பட்டிருந்தால் தற்போது இந்த திட்டம் செயல்வடிவம் பெற்று பயணிகள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டிருக்கும்.

கிழக்கு கடற்கரை ரயில் பாதை:-

கிழக்கு கடற்கரை ரயில் பாதை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், காரைக்குடி வரை  ரயில் மூலம் இணைக்கப்பட வேண்டும் என்று தென் தமிழ்நாடு மக்களின் கோரிக்கை வலுத்து வருகிறது.  கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் போது இந்த வழி தடத்தில் உள்ள தூத்துக்குடி துறைமுகத்துடன் நேரடியாக ரயில் வழி பாதை மூலம் இணைக்க பட்டுவிடும். 

இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்த பகுதியில் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். தற்போது  கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயிலில் பயணிக்க வேண்டுமானால் நாகர்கோவில்,திருநெல்வேலி வழியாக 136 கி.மீ பயணித்த சுற்று பாதையில் தான் செல்ல முடியும். கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கப்ட்டால் பயணதூரம் 70 கி.மீ மட்டுமே ஆகும்.

சென்னை – மகாபலிபுரம் - கடலூர் புதிய ரயில் பாதை:-

சென்னையிலிருந்து மகாபலிபுரம் புதுச்சேரி வழியாக கடலூர் வரை 178.28 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதை ரயில் பாதை அமைக்க 2008-09 ரயில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் அப்போதைய தமிழகத்தை சார்ந்த ரயில்வே இணை அமைச்சர் வேலு அவர்களின் முயற்சியால் இந்த திட்டம் அனுமதி அளிக்கப்பட்டது.  இந்த திட்டம் தற்போது சென்னையிலிருந்து மகாபலிபுரத்துக்கு கிழக்கு கடற்கரை வழியாக சாலை இருப்பதை போன்று ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. 

இந்த திட்டம் தமிழக தலைநகர் சென்னையையும் புதுவை மாநிலத்தையும் நேரடியாக ரயில் மூலம் இணைக்கும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் அப்போதைய மதிப்பு 523.52 கோடிகள் ஆகும். இன்று வரை இந்த திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. சென்னையை சுற்றி அதிபயங்கரமாக அசுர வேகத்தில் நகரமயமாக்கல் நடைபெற்று வருவதால் சென்னையை ஒட்டிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவது என்பது இயலாத காரியம் ஆகும். ஆகவே இந்த திட்டம் இனி வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. 

இதற்கு மாற்று திட்டத்தை செயல்படுத்த ரயில்வேதுறை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக செங்கல்பட்டில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர் வரை புதிய பாதை அமைக்க ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது.

கன்னியாகுமரி – காரைக்குடி புதிய ரயில் பாதை:-

கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர்,தூத்துக்குடி, காயல்பட்டினம்,ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை,  ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை புதிய ரயில்வே இருப்பு பாதை தடம் அமைக்க 2008-09 ரயில் நிதிநிலை அறிக்கையில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி செய்ய அறிவிக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை புதிய ரயில் இருப்பு பாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு பணி முடிவடைந்து திட்ட மதிப்பீடை ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே சமர்ப்பித்துவிட்டு. இந்த ஆய்வுப்பணி இரண்டு பிரிவுகளாக நடந்தது.

காரைக்குடி – தூத்துக்குடி:

காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி கிழக்கு கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் புதிய ரயில் பாதை அமைக்க ஆய்வு பணி நடைபெற்றது. இந்த ஆய்வு பணியில் 214.81 கி.மீ தூரம் ரயில் பாதை அமைக்க 879 கோடிகள் தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் தேவகோட்டை, தேவிப்பட்டிணம்,கீழக்கரை, ஏர்வாடி,சாயல்குடி,சூரங்குடி, குழத்து வழியாக தூத்துக்குடி சர்வே செய்யப்பட்டது.

தூத்துக்குடி - கன்னியாகுமரி:-

கிழக்கு கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரியிலிருந்து தூத்துக்குடி வழியாக ராமநாதபுரம் வரை பாதை அமைக்க நடைபெற்ற ஆய்வு பணியில் இந்த திட்டம் 247.66 கி.மீ தூரத்துக்கு ரயில் பாதை அமைக்க 1080 கோடிகள் தேவைப்படும் என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரபட்டினம், மணிநகர், திசையன்விளை,நாவலடி,கூடங்குளம், மகாராஜபுரம்,பெருமாள்புரம் வழியாக கன்னியாகுமரி செல்லும்.

மொத்த ரயில் நிலையங்கள்: காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 34 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களை சேர்த்து ; 462.47 கி.மீ தூரத்தில் 1965.763 கோடிகள் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று சமர்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான ரேட் ஆப் ரிட்டன் -8.884 சதமானம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. குறைந்த ரேட் ஆப் ரிட்டன் உள்ள காரணத்தால் இந்த திட்டத்தை ரயில்வே வாரியம் கிடப்பில் போட்டுள்ளது.

திருச்சியில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அவர்கள் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதி நடைபெற்ற விழாவின் போது சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை வழியாக கன்னியாகுமரிக்கு இருப்பு பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள். இந்த திட்டத்துக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இந்த திட்டம்  நிறைவேற்றப்படும் என்பதையும் தெரிவித்தார். அவர் ரயில்வே அமைச்சராக தொடர்ந்திருந்தால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு இருக்கும் நல்ல சிறப்பாக செயல்பட்ட ஒரு ரயில்வே அமைச்சர் மாற்றப்பட்டார்.

இந்த திட்டம் சர்வே செய்யும் 2009 முதல் 2011 வரை இந்த பகுதிகள் பெரிதும் கண்டுகொள்ளப்படாமல் இருந்து வந்தது. தற்போது இந்த கிழக்கு கடற்கரை ஓரமாக பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கூடங்குளம் அணுமின் நிலையம், குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம், கிழக்கு கடற்கரை பொருளாதார மண்டலம், மின் திட்டங்கள் என பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இது மட்டுமல்லாமல் கேரளா தமிழ்நாடு எல்லை அருகே விழிஞம் என்ற இடத்தில் புதிய துறைமுகம் அமைக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. கிழக்கு கடற்கரையில் உள்ள தூத்துக்குடி மற்றும் மேற்கு கடற்கரையில் உள்ள விழிஞம் துறைமுகத்துக்கு சரக்கு போக்குவரத்துக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக திட்டமாக இருக்கும். இந்த நிலையில் இந்த இருப்பு பாதை திட்டத்தை மீண்டும் ரிசர்வே செய்ய வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. 

ஏனென்றால் ரிசர்வே செய்தால்தான் தற்போது இந்த திட்டத்தின் நிதி எவ்வளவு ஆகும், வருவாய் எவ்வளவு கிடைக்கும் என மேம்படுத்தப்பட்ட முழு விவரங்கள் தெரியவரும். ஆனால் ரயில்வே நிர்வாகம் இந்த திட்டத்தை ரிசர்வே செய்ய கூட தயாராக இல்லை. தென்மாவட்ட  மக்கள் முதலில் இந்த திட்டத்தை ரிசர்வே செய்ய கோரிக்கை வைத்தார்கள். அதற்கு கூட மத்திய அரசு தயாராக இல்லை.

மக்கள் தொகை அடர்த்தியை போன்று ரயில் அடர்த்தியையும் கணக்கிட்டு வருகின்றார்கள். தமிழ்நாடு அகில இந்திய அளவில் வளர்ச்சியில் இரண்டாவது பெரிய மாநிலம் ஆகும். இந்த ரயில் அடர்த்தி என்பது 1000 சதுர கி.மீ பரப்பளவில் எவ்வளவு ரயில்வே இருப்புப் பாதைகள் உள்ளன என்பதை கணக்கிடுவது ஆகும். தமிழ்நாடு தற்போது 32.07 ரயில் அடர்த்தி உள்ளது. 

அதை படிப்படியாக 50 வரை அதிகரிக்க வேண்டும். உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டை விட  முன்னில் உள்ளன. தமிழகம் மத்திய அரசுக்கு செலுத்தும் வரி வருவாயில் இரண்டாம் இடத்தில் உள்ளது. வரி வருவாயில் இரண்டாம் இடத்தில் உள்ளது போன்று ரயில் அடர்த்தியிலும் இரண்டாம் இடத்துக்கு வரவேண்டும். இதற்கு குறைந்தபட்சம் வருடத்துக்கு ஒரு புதிய இருப்புபாதை திட்டத்தையாவது செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தமிழ்நாடு  வளர்ச்சி பாதையில் செல்லும். ஆகவே இந்த திட்டம் வருகின்ற பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று தென்மாவட்ட மக்களால் எதிர்ப்பார்க்கப்படுகின்றது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory