» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி: மிஸ் கூவாகம் பட்டத்தை வென்றார் கோவை சூர்யா!

செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:43:20 PM (IST)



சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கூவாகம் ‘மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த சூர்யா முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் உலகப்புகழ் பெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில், கோவையைச் சேர்ந்த சூர்யா ‘மிஸ் கூவாகம்-2026’ பட்டத்தை வென்றுள்ளார்.

கடந்த 14-ஆம் தேதி ‘சாகை வார்த்தல்’ நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்தத் திருவிழாவில் பங்கேற்க, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகம் மற்றும் விழுப்புரம் பகுதியில் குவிந்துள்ளனர். இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு, தமிழக சமூக நலத்துறை மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் இணைந்து ‘மிஸ் கூவாகம்’ போட்டியை நடத்தின.

இப்போட்டியில் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் மட்டுமன்றி புதுச்சேரி, பெங்களூரு, மைசூர், புனே மற்றும் மலேசியாவிலிருந்தும் 40-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர். முதல் சுற்றில் நடை, உடை, பாவனை அடிப்படையில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.  இரண்டாம் சுற்றில் சிறப்பாகச் செயல்பட்ட 15 பேர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

இறுதிச் சுற்றில் தமிழ் கலாச்சாரம், பொது அறிவு மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகளுக்குத் துடிப்பாகப் பதிலளித்து நடுவர்களைக் கவர்ந்த கோவையைச் சேர்ந்த சூர்யா, ‘மிஸ் கூவாகம்’ பட்டத்தைச் சூடினார். அவருக்கு ரூ.50,000 பரிசு மற்றும் கிரீடம் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த நிஷா (மலேசியா) – ரூ.25,000 பரிசு. மூன்றாம் இடம் அனன்யா (புதுச்சேரி) – ரூ.11,000 பரிசும் வென்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு மற்ற திருநங்கைகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். முன்னதாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறந்து விளங்கும் 10 இளம் திருநங்கைகளுக்கு ‘சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்வான அரவான் சாமி கண் திறத்தல் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) தேரோட்டமும் நடைபெறவுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory