» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது! – அமைச்சர் என். ஆனந்த் அதிரடி உத்தரவு!

வெள்ளி 22, மே 2026 11:37:11 AM (IST)

அரசு சார்ந்த விவகாரங்கள் மற்றும் அரசுத் துறை அலுவலகங்களில் மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தவெகவினர் யாரும் நேரடியாகத் தலையிடவோ அல்லது ஆய்வுகள் மேற்கொள்ளவோ கூடாது என்று கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய தவெக அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், சமீபத்தில் தென்காசி மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளுக்குள் தவெக-வைச் சேர்ந்த உள்ளூர் நிர்வாகிகள் திடீரெனப் புகுந்து, அரசு அதிகாரிகள் போல ஆய்வுகளை மேற்கொண்டனர். மக்கள் பிரதிநிதிகள் அல்லாத வெளிநபர்கள் அரசு உள்கட்டமைப்பிற்குள் தலையிட்ட இந்தச் சம்பவங்கள் பொதுவெளியிலும், அரசியல் வட்டாரத்திலும் கடுமையான சர்ச்சைகளையும் விவாதங்களையும் எழுப்பியது.

இந்த விவகாரத்தை அடுத்து, தவெக தலைவர் ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில், கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தவெகவினர் அனைவருக்கும் அவசர அதிகாரப்பூர்வ அறிவுரை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "அரசு சார்ந்த எந்தவொரு விவகாரங்களிலும் தவெகவினர் யாரும் தன்னிச்சையாகத் தலையிடுதல் கூடாது. தங்களின் தார்மீக எல்லை என்ன என்பதைத் துல்லியமாக அறிந்து தவெகவினர் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

குறிப்பாக, மக்கள் பிரதிநிதிகள் அல்லாத மற்ற கட்சி நிர்வாகிகள் யாரும் அரசு சார்ந்த நிர்வாக விவகாரங்களில் தலையிடுவதோ அல்லது அரசு அலுவலகங்கள், பொது மருத்துவமனைகளில் ஆய்வுகள் மேற்கொள்வதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

முதலமைச்சரின் நற்பெயருக்குக் கொஞ்சமும் களங்கம் ஏற்படாத வகையில் தூய்மையாக நடந்து கொள்வது நம் ஒவ்வொருவரின் முதன்மையான கடமையாகும். முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டில் புதிய உன்னத ஆட்சி அமைந்துவிட்ட நிலையில், நமக்கான சமூகப் பொறுப்பு முன்னெப்போதையும் விட இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது." என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory