» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வட மாநில வாலிபர் கட்டையால் அடித்துக் கொலை : தூத்துக்குடியில் பரபரப்பு!

சனி 20, ஜூன் 2026 8:47:18 AM (IST)

தூத்துக்குடியில் மதுபானக் கடை அருகே வட மாநிலத் தொழிலாளிகளுக்குள் ஏற்பட்ட பயங்கர மோதலில், வாலிபர் ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகத் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இருவரைத் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் மில்களில் ஏராளமான வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று இரவு வேலை முடிந்ததும் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு 3-ஆம் மைல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அருகேயுள்ள மதுபானக் கடையில் வட மாநிலத் தொழிலாளர்கள் சிலர் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் சிலர், அங்கிருந்த கட்டையை எடுத்து சுமார் 27 வயது மதிக்கத்தக்க வட மாநிலத் தொழிலாளி ஒருவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் தலை மற்றும் உடம்பில் பலத்த காயமடைந்த அந்த வாலிபர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த வட மாநிலத் தொழிலாளியின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய 3 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரைத் தென்பாகம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற இரண்டு நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

கொலை செய்யப்பட்ட வாலிபர் யார், அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் மற்றும் கொலைக்கான முழுமையான பின்னணி என்ன என்பது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory