» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலரின் 152-வது பிறந்தநாள் விழா : ஆட்சியர் பிரதாப் மரியாதை!

வெள்ளி 31, ஜூலை 2026 3:13:45 PM (IST)

PavalarBdkk.jpg

மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலரின் 152-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் நாகர்கோவிலில் அவரது திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். 

மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலரின் 152-வது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவு மண்டபத்தில், மாவட்ட ஆட்சியர் பிரதாப், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆஸ்டின் முன்னிலையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சிக்குப் பின் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்ததாவது: "மகாமதி சதாவதானி செய்குதம்பி பாவலரின் நினைவைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளான ஜூலை 31-ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று அவரது 152-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது."

பிறப்பும் கல்வியும்: கி.பி. 1874 ஜூலை 31 அன்று கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் இடலாக்குடியில் பக்கீர் மீரான் - உம்மாள் ஆமீனா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்து, கவிபாடும் திறன் பெற்றிருந்ததால் அனைவராலும் 'பாவலர்' என்று அழைக்கப்பட்டார்.

சதாவதான சாதனை: 1907 மார்ச் 10 அன்று சென்னை விக்டோரியா நினைவு மண்டபத்தில், வித்துவான் கண்ணபிரான் முதலியார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒரே நேரத்தில் 100 செயல்களைச் செய்து 'சதாவதானி' என்ற சாதனைப் பட்டம் பெற்றார். நாஞ்சில் நாட்டில் தேசிய விடுதலை உணர்வூட்டும் பணிகளை மேற்கொண்ட இவர், சுதந்திர இந்தியாவைக் கண்ட பின்னர் கி.பி. 1950 பிப்ரவரி 13 அன்று காலமானார்.

செய்குதம்பி பாவலரின் புகழைப் போற்றும் வகையில் அவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. மேலும், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அவரது உருவம் பொறித்த சிறப்புத் தபால் தலையும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பு மேயர் மேரி பிரின்சி லதா, வருவாய் கோட்டாட்சியர் செந்தில் வேல் முருகன், மகளிர் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா. ஜாண் ஜெகத் பிரைட், நகர்மன்ற உறுப்பினர்கள், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஆறுமுகம் மற்றும் பாவலரின் குடும்பத்தினரான பேரன்கள் கவிஞர் ஜமால் முகமது, ஷபிக் மீரான் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory